ஒரே நாளில் 200,000 பேர் பாதிப்பு

ஒரே நாளில் 200,000 பேர் பாதிப்பு

3 mins read

இந்தியா: மருத்துவமனைகளில் போதிய இடமில்லை; ஆக்சிஜன் பற்றாக்குறை; மரணங்கள் கூடும் ஆபத்து

இந்தியாவில் கொவிட்-19 தொற்று பாதிப்பு, சென்ற ஆண்டின் உச்ச அளவையும் விஞ்சி இந்த ஆண்டில் மிக மோசமாக இருக்கிறது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் புதிதாக 200,739 பேர் பாதிக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து நாட்டில் பல பகுதிகளிலும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடமின்றி ஏராளமான நோயாளிகள் அவதிப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டின் நிதி மையம் என்று கூறப்படும் மும்பை முடங்கிவிட்டது. அங்கு பல்வேறு மருத்துவமனைகளிலும் இடமில்லாமல் நோயாளிகளுக்கு ஆக்சிஜனும் இல்லாமல் நிலைமை படுமோசமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கிருமித்தொற்று கடந்த எட்டு நாட்களில் ஒரு நாள் நீங்கலாக மற்ற நாட்களில் சாதனை அளவாக உயர்ந்து விட்டது. மகாராஷ்டிராதான் படுமோசமாக இருப்பதாகவும் மொத்த பாதிப்பில் கால்வாசிப்பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அந்த நாட்டில் 24 மணி நேரத்தில் 1,038 பேர் மாண்டதை அடுத்து கொரோனா வுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 173,123 ஆகிவிட்டது.

கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 14.1 மில்லியன். மகாராஷ்டிரா, குஜராத் மாநிலம், புதுடெல்லி உள்ளிட்ட இதர பல பகுதிகளிலும் போதிய அளவுக்குச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் இல்லாததால் அச்சமும் குழப்பமும் காணப்படுவதாக மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.

குஜராத்தில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை. இதே நிலைமை நீடித்தால் மரண எண்ணிக்கை கூடும் என்று அகமதாபாத் நகர மருத்துவ நிலைய தலைவர் ஒருவர் குஜராத் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வேளையில், உத்ரகாண்ட் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்குக் கிருமி தொற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் சாதனை அளவுக்குத் தொற்று இருக்கிறது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் மரண எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

உலகில் அன்றாடம் புதிதாக கிருமி தொற்றுவோரில் ஆறில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் 45, அதற்கும் அதிக வயதினருக்கு

ஏப்ரல் 25க்குள் தடுப்பூசி போட உத்தரவு

தமிழகத்தில் 45 வயதை எட்டிய, அந்த வயதைக் கடந்த அனைவருக்கும் இந்த மாதம் 25ஆம் தேதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப்படுத்தும்படி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுகாதாரச் சேவை துணை இயக்குநர்களுக்கும் சென்னை மாநகர் மருத்துவ அதிகாரிக்கும் மாநிலத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்தக இயக்குநர் டி எஸ் செல்வவிநாயகம் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

"இந்த 14 நாள் செயல்திட்டத்தை அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும்; தடுப்பூசி விரயத்தைத் தடுக்க வேண்டும், தகுதி உள்ளவர்களுக்குக் குறித்த காலத்தில் தடுப்பூசி போடப்படவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்," என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிருமித்தொற்றை ஒடுக்கவும் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்தவும் முயற்சிகள்:-

மேலும் செய்தி பக்கம் 5ல்