தாம்சன் சாலையில் வடக்கு தெற்கு விரைவுச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத் தளத்திற்கு அருகே ஒரு சில மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்படும்.
அந்தக் கட்டடத்தின் கான்கிரீட் திடமாக இருக்கிறதா என்பது குறித்த அக்கறை அண்மையில் எழுந்துள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இன்று (ஏப்ரல் 16) வெளிவந்துள்ளது.
எண் 68-74 தாம்சன் சாலையில் உள்ள இந்தக் கட்டடம் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்ட பின்னரே அப்பகுதியில் வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் சுரங்கப்பாதையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம், கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவை இன்று இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

