நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் மேலும் 234,692 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்தது.
கடந்த ஒன்பது நாட்களில் இதுவே ஆக அதிகமான அன்றாடப் பதிவாகும்.
இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 14.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.
கொவிட்-19 காரணமாக மேலும் 1,341 பேர் மாண்டுவிட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 175,649 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துவிட்டனர்.
கடந்த 38 நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் படுக்கைக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இரண்டு நோயாளிகளுக்கு ஒரு படுக்கை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய அளவிலான குணமடையும் விகிதம் 87.23 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
குணமடைந்து வசிப்பிடம் திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார அமைச்சின் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியது.
ஆகஸ்ட் 23ல் மூன்று மில்லியனை அது தாண்டியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நான்கு மில்லியனையும் செப்டம்பர் 16ல் ஐந்து மில்லியனையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தாண்டியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.
இதற்கிடையே, இந்துக்களின் முக்கிய சமய நிகழ்வுகளில் ஒன்றான கும்ப மேள விழா இம்முறை அடையாள பங்கேற்பாக இருக்கட்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சமய நிகழ்வை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கங்கை நதி கரையோரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.
கொரோனா மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், முகக்கவசம் ஏதுமின்றி, சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்காமல் பக்தர் கூட்டம் அலைமோதுவதை இந்திய அரசாங்கம் தடுக்கவில்லை என்று மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கும்ப மேள விழாவில் பெருந்திரளாகக் கூட வேண்டாம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, அதிகமானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம் என இந்து சமயத் தலைவர்களில் ஒருவரான சுவாமி அவ்தேஷானந்த் பக்தர்களைக் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. பிரசாரக் கூட்டங்களைக் காண பெருந்திரளாகக் கூடிய மக்கள் பலர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் கொரோனா அதிகரிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் குறைகூறப்படுகிறது.

