சிங்கப்பூர் ஆற்றில் இருந்து நேற்று காலை நேரத்தில் இரண்டு ஆடவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த ஆடவர்களுக்கு வயது 26 மற்றும் 28 என்று தெரிந்தது.
கிளார்க் கீ சென்ட்ரல் பகுதியில் 6 யூ தோங் சென் ஸ்திரீட்டுக்கு அருகே யாரோ ஆற்றில் மூழ்கிவிட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக போலிசாருக்கு நேற்று அதிகாலை 1.57 மணிக்குத் தகவல் கிடைத்தது.
அதிகாலை ஏறத்தாழ 2 மணிக்கு ஆற்றில் மீட்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்ததாக அந்தப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு யாரையும் காண வில்லை.
குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த முக்குளிப்பாளர்கள் ஆற்றின் உள்ளே தேடுதல் முயற்சியை மேற்கொண்டார்கள்.
தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும் சாதனத்தின் உதவியாலும் ஆற்றில் தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தண்ணீருக்குக் கீழே உள்ள காட்சிகளைத் தோற்ற வடிவில் எடுத்துக்காட்டும் சாதனம் பயன்படுத்தப்பட்டது.
இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவதால் முக்குளிப்பாளர்களுக்குத் தண்ணீரின் ஆழ்பகுதியில் ஆபத்து நிகழ்வதைத் தவிர்க்கலாம் என்றும் தேடுதல் முயற்சிகளுக்கு ஆகும் நேரமும் குறையும் என்றும் இந்தப் படையின் பேச்சாளர் ஒருவர் விளக்கினார்.
முக்குளிப்பாளர்கள் ஓர் உடலை அதிகாலை ஏறத்தாழ 4 மணிக்கும் மற்றோர் உடலை விடிகாலை ஏறத்தாழ 5.45 மணிக்கும் மீட்டனர். அந்த இரண்டு ஆடவர்களும் மரணமடைந்துவிட்டதாக சம்பவ இடத்தில் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் பார்க்கையில், இந்தச் சம்பவத்தில் சூது ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் புலன்விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும் போலிஸ் பேச்சா ளர் ஒருவர் கூறினார்.