இந்தியா: நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் கொவிட்-19 தொற்று; மொத்த பாதிப்பு 15 மில்லியனைக் கடந்தது
இந்தியாவில் கொவிட்-19 இரண்டாம் அலை வீசிவரும் நிலையில், அதனால் பாதிக்கப்படுவோர், மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 273,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்றுக் காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. கிருமித்தொற்றால் மேலும் 1,619 பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 15,061,919 ஆகவும் மரண எண்ணிக்கை 178,769 ஆகவும் அதிகரித்தது.
கிட்டத்தட்ட 13 மில்லியன் பேர் தொற்றிலிருந்து மீண்டுவிட்ட நிலையில், இப்போது 1.9 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் இதற்குமுன் இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 25,462 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று இரவு அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை காலைவரை அங்கு ஊரடங்கு நடப்பில் இருக்கும். இந்த ஆறு நாள்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இப்போது ஊரடங்கை அறிவிக்காவிடில் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதாகவும் உயிர்வளி (ஆக்சிஜன்) விநியோகம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு 'சிறியளவிலான முடக்கநிலை' என்ற அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு
இதற்கிடையே, தமிழகத்திலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவுநேர ஊரடங்கின்போது பொது, தனியார் போக்குவரத்துக்கு அனுமதியில்லை.
அதேபோல, பீகார் மாநிலத்திலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15ஆம் தேதி அங்கு கல்வி நிலையங்களும் சமயத் தலங்களும் மூடப்பட்டிருக்கும்.
பிரதமர் அவசர ஆலோசனை
கிருமிப் பரவல் மிக மோசமடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முற்பகல் 11.30 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம் இடம்பெற்றது. மாலை 4.30 மணியளவில் நாட்டின் முன்னணி மருத்துவர்களுடனும் அதன்பின் மாலை 6 மணிக்கு முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் காணொளி வழியாக ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிர்வளி பற்றாக்குறையை அடுத்து, மருத்துவம் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு 'ஆக்சிஜன் சிலிண்டர்' விநியோகம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
20 நோயாளிகள் தப்பியோட்டம்
இதனிடையே, உத்தராகண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் 20 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது கிருமி தொற்றிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று முதல் இரு வாரங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வர ஹாங்காங் தடை விதித்து உள்ளது. 'என்501ஒய்' எனும் உருமாற்றக் கிருமி அங்கு கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

