பயன்படுத்திய நீரைச் சுத்திகரிக்கும் வசதிகளை நிலத்தடிக்குக் கொண்டுசெல்வதன் மூலம் நிலப்பகுதியை விடுவிப்பதை இலக்காகக் கொண்டுள்ள முக்கியத் திட்டம் இடம்பெற்று வருகிறது.
பத்து பில்லியன் வெள்ளி மதிப்பிலான இந்த ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டப் பணிகளை 2025ஆம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய, மேற்கு சிங்கப்பூருக்கான இந்த 100 கிலோமீட்டர் நீள நிலத்தடி 'நீர் நெடுஞ்சாலை' திட்டப் பணிகளில் நான்கில் ஒரு பகுதி நிறைவடைந்துவிட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட 'முக்கிய உள்கட்டமைப்புகளுக்கான அரசாங்கக் கடன் சட்டம் (சிங்கா)', குறைந்தது 50 ஆண்டுகளுக்கு நீடிக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசாங்கம் $90 பில்லியன் வெள்ளிவரை கடன்பெற அனுமதிக்கிறது.
"சிங்கப்பூர் நீண்டகால நோக்கில் எவ்வாறு கட்டமைக்கிறது என்பதற்கு ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டம் ஓர் எடுத்துக்காட்டு.
"உண்மையில், அந்த அமைப்பு அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக இந்தத் தலைமுறையில் செயல்திறன்மிக்கதாகக் கட்டமைக்கிறோம்," என்று அந்த ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளை நேற்றுப் பார்வையிட்டபோது நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் அவருடன் சென்றிருந்தார்.
பயன்படுத்திய நீரைப் பல ஆழ்சுரங்க சாக்கடைக் குழாய்களைக் கொண்டு புவியீர்ப்பு விசையின்மூலம் மூன்று மையப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பும் கட்டமைப்பே இந்த ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டம். அந்த மூன்று மையப்படுத்தப்பட்ட ஆலைகளிலும் பயன்படுத்திய நீர் சுத்திகரிக்கப்பட்டு, 'நியூவாட்டர்' பெறப்படும்.
சிங்கப்பூர் தனது நீர் மீட்சித்தன்மையை மேம்படுத்தும் விதமாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் திட்டம் கருக்கொண்டது. பயன்படுத்திய ஒவ்வொரு துளி நீரையும் வீணாக்காமல் சேமித்து, அதை மீண்டும் பயன்படுத்த இந்த ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டம் வழிவகுக்கும்.
வரும் 2025ஆம் ஆண்டில் ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டம் முழுமையாகத் தயாரானதும், இடைநிலை நீரேற்று நிலையங்களும் நீர் மீட்பு ஆலைகளும் கட்டம் கட்டமாக விடைபெற்று, 214 காற்பந்துத் திடல்கள் அளவிற்கு நிலப்பகுதி விடுவிக்கப்படும்.
ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கான, 100 கிலோமீட்டர் நீளத்திற்கும் மேல் சுரங்கவழிகளையும் இணைப்புக் கழிவுநீர்க் குழாய்களையும் கொண்ட முதற்கட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டில் முடிவடைந்தன. அதற்கு $3.4 பில்லியன் செலவானது.
இரண்டாம் கட்டப் பணிகளுக்கு $6.5 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கடைசியாக 1970களிலும் 1980களிலும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகக் கடன் வாங்கி இருந்தது. அப்போது சாங்கி விமான நிலையம், சிங்கப்பூரின் முதலாவது எம்ஆர்டி தடங்கள் ஆகியவற்றுக்காகக் கடன் மூலம் நிதி திரட்டப்பட்டது.
1990களில் பொருளியல் துரித வளர்ச்சி கண்டதை அடுத்து, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசாங்கம் தனது வருவாயில் இருந்து நிதி வழங்கியது.
புதிய ரயில் தடங்கள், கடல்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என அரசாங்கம் இப்போது வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது.
கொவிட்-19 பரவலால் அதிகரித்துள்ள, கடுமையான நிதிச் சூழலில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
சிங்கப்பூர் 2020 நிதியாண்டில் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையாக $64.9 பில்லியனையும் இந்த நிதியாண்டில் மேலும் $11 பில்லியனையும் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

