இந்தியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மேலும் 2,000க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக மாண்டனர். நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 295,000 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. இந்தியாவில் பாதிப்படைந்தோர் மொத்த எண்ணிக்கை 15,616,130ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தம் 182,553 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குப் போதுமான பிராணவாயு (ஆக்சிஜன்) இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராணவாயு பற்றாக்குறை அபாயநிலையை எட்டியிருப்பதாக இந்திய மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மைய வாரங்களில் இந்தியாவில் பெரிய அளவிலான பல ஒன்றுகூடல்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் கும்பமேளா சமய நிகழ்வு, தேர்தல் பிரசாரங்கள், ஆடம்பரமான திருமண விழாக்கள், இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டி போன்றவை அடங்கும்.
சில தொழிற்சாலைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்படும் சில முக்கிய மருந்துகளின் உற்பத்தி முடங்கிவிட்டதாகவும் பிராணவாயு உற்பத்தி செய்யும் ஆலைகளை நடத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரைக் காப்பாற்ற கள்ளச் சந்தை வாயிலாக மிக அதிக விலையில் மருந்து மற்றும் பிராணவாயுவை வாங்கும் நிலை உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திரு கெஜ்ரிவால் நேற்று தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கட்டுப்
பாடுகளை விதித்துள்ளன. ஒரு வார முடக்கநிலையை டெல்லி அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன. வாரயிறுதி முடக்கநிலையை
உத்தரப் பிரதேச அரசாங்கம் நடைமுறைப்படுத்த இருக்கிறது.
இந்தியாவில் கொவிட்-19 சூழல் மோசமடைந்திருப்பதாலும் அங்கு பரவிவரும் இரட்டிப்பு உருமாற்ற கிருமியாலும் இந்தியாவுக்குப்
பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா அதன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டது.
இந்தியாவை கொவிட்-19 அபாய நாடுகள் பட்டியலில் பிரிட்டன் சேர்த்துள்ளது.

