உலகில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 314,835 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் 2,104 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 16 மில்லியனை நெருங்கி இருக்கிறது; பலி எண்ணிக்கை 184,657ஆக அதிகரித்தது.
அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 297,000 பேரை கொரோனா தொற்றியிருந்ததே முந்திய உச்சம்.
இதனிடையே, தேசிய நெருக்கடிநிலை போன்றதொரு சூழலை நாடு எதிர்கொண்டுள்ளதால் கொரோனா பரவலைச் சமாளிக்க ஆக்சிஜன், மருந்துப் பொருள்கள் விநியோகம், தடுப்பூசி நடவடிக்கை, பொது முடக்கத்தை அறிவிப்பதற்கான அதிகாரம் போன்றவை உட்பட ஒரு தேசிய அளவிலான திட்டத்தைத் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொவிட்-19 ஆயத்தநிலை தொடர்பில் குறைந்தது ஆறு உயர் நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் தானாக முன்வந்து அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகப் பல மாநிலங்களும் கூக்குரல் எழுப்பிவரும் நிலையில், இந்தியாவில் போதுமான அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஆனால் அதை எடுத்துச்செல்வதில்தான் பிரச்சினை நிலவுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, இந்திய விமானப் படையைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கொள்கலன்களையும் சாதனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக 'இந்தியா டுடே' செய்தி கூறுகிறது.

