மருத்துவமனைகள் திணறியவாறு ஆக்ஸிஜன் விநியோகம் தேவை என்று கோரி வரும் நிலையில், மூன்றாவது நாளாக இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
24 மணி நேரத்தில் 346,786 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டாவது கிருமி அலையில் இந்தியா சிக்குண்டு தவிக்க, டெல்லியில் நான்கு நிமிடத்திற்கு ஒரு கொவிட்-19 உயிரிழப்பு பதிவாகி வருகிறது.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அரசாங்கம் ராணுவ விமானங்களையும் ரயில்களையும் டெல்லிக்கு அனுப்பி வைத்து வருகிறது.
அதன் 260 நோயாளிகளுக்கு 90 நிமிடங்கள் நீடிக்கும் அளவுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளதெனக் கூறி டெல்லியின் பத்ரா மருத்துவமனை அவசர உதவிக்குரல் எழுப்பியதை அடுத்து ஆக்ஸிஜன் சரக்கு வண்டி ஒன்று அங்கு அனுப்பப்பட்டது.
கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 25 நோயாளிகள், தாங்கள் இருந்த ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வந்து சேர்வதற்குள் உயிரிழந்துவிட்டனர். அரசாங்கம் அனுப்பிய ஆக்ஸிஜன் விநியோகம், மாலை 5 மணிக்குள் அடைய வேண்டிய நிலையில், நள்ளிரவுதான் அது வந்து சேர்ந்ததாகவும் அதற்குள் அந்த 25 பேரும் உயிரை விட்டனர் என்றும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டி.கே.பாலுஜா கூறினார்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் பதிவாகி வரும் புதிய கொவிட்-19 நோயாளிகளைச் சமாளிக்கத் திண்டாடும் பல மருத்துவமனைகள், மருத்துவ ஆக்ஸிஜன் வேண்டும் எனக் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 2,624 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் மொத்த தொற்று எண்ணிக்கை 16.6 மில்லியனைத் தொட்டுள்ளது. இதில் 189,544 உயிரிழப்புகளும் அடங்கும்.
தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தை எட்டக் குறைந்தது மூன்று வாரங்களாவது ஆகும் என்று முன்னுரைக்கும் நிபுணர்கள், நாட்டில் உண்மையான உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்படுவதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் கிருமித்தொற்று பரவுவதைக் குறைப்பது என்பது 'மிகக் கடினமான பணி' என்று குறிப்பிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடிப் பிரிவு இயக்குநர் மைக் ராயன், மக்களிடையே ஒன்றுகூடல்கள் இருப்பதை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.
சிங்கப்பூர் உதவிக்கரம்
இருதரப்பு உறவு மற்றும்
பல அமைப்புநிலை முயற்சியாக நான்கு குளிர்விக்கும் கொள்கலன்களை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து இந்திய ஆகாயப் படை, நேற்று வான்வழியாக இந்தியாவுக்குக் கொண்டு சென்றது. இந்தியாவில் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்குக் இந்த கொள்கலன்கள் பயன்படுத்தப்படும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
"கொவிட்-19க்கு எதிரான போரில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்திருக்கிறோம்," என்று புதுடெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகக் கிளைகள் டுவிட்டரில் பதிவிட்டிருந்தன.

