வட்டார நிலையில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவை நிலவுவதை ஆசியான் உறுப்பு நாடுகள் உறுதிசெய்வதில் கடப்பாடு கொண்டுள்ளன. மியன்மாரில் நடப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றார் பிரதமர் லீ சியன் லூங்.
"நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மௌனம் சாதிப்பதால் ஆசியானின் மையத்தன்மை, நம்பகத்தன்மை, முக்கியத்துவம் ஆகியவை குறைத்து மதிப்பிடப்படலாம்," என்றார் அவர்.
ஜகார்த்தாவில் சக ஆசியான் தலைவர்களுடன் நேற்று சந்தித்துப் பேசிய திரு லீ, "நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் காயமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதைச் செய்தி அறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது. உணவு, மருத்துவப் பொருட்கள், எரிசக்தி ஆகியவற்றில் தட்டுப்பாடும் மோசமடைந்து வருகிறது. மனிதநேய பேரிடர் ஒன்று நம் கண் முன்னே விரிவடைகிறது," என்றார்.
இப்பிரச்சினைகளைக் களைய, மியன்மாருக்கும் அதன் மக்களுக்கும் உதவ ஆசியான் உறுப்பு நாடுகள் உதவ விரும்புவதாக திரு லீ வலியுறுத்தினார். ஆசியானின் செயல்பாட்டை அனைத்துலகச் சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆசியானின் செயல்முறை மற்றும் வெளி பங்காளிகளுடன் அது செய்துகொண்டுள்ள ஏற்பாடுகள் யாவும் தொடர வேண்டும் என்றார் திரு லீ.
மியன்மாரின் ராணுவத் தலைவர் மின் அவுங் லைய்ங் உட்பட நேற்று நடந்த கூட்டத்தில், ஆறு ஆசியான் தலைவர்கள் கலந்துகொண்டனர். ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு பிப்ரவரி 1ஆம் தேதியன்று மியன்மாரில் நடந்ததை அடுத்து, அங்கு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டதும் குறித்துக் கூட்டத்தில் பேசப்பட்டது.
மற்ற தலைவர்கள் குறிப்பிட்ட கருத்துகளை பிரதமர் லீ ஆறு முக்கிய அம்சங்களாக கோடிட்டார்.
மியன்மாரில் வன்முறையை நிறுத்தவேண்டும், தடுப்புக்காவலில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், அனைத்து முக்கிய பங்காளிகளுடனான அரசியல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவேண்டும், ஆசியான் பயனுள்ள வகையில் பங்காற்ற வேண்டும், ஆசியான் தூதர்கள் வருகை புரியும் வசதி வேண்டும் மற்றும் ஆசியான் தலைமையில் மனிதநேய உதவி வழங்கும் வசதி வேண்டும் என்பதே திரு லீ குறிப்பிட்ட அந்த ஆறு அம்சங்கள்.
நிராயுதபாணியாக இருக்கும் பொதுமக்களுக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் ஆபத்து விளைவிக்கும் வன்முறையைப் பயன்படுத்துவதை சிங்கப்பூர் கடுமையாக எதிர்க்கிறது என்று திரு லீ தம் உரையில் குறிப்பிட்டார்.
மியன்மார் ராணுவ அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டு மேலும் வன்முறை, ரத்தக்களரி இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலத்தில் மியன்மாருக்குத் துணையாக ஆசியான் இருந்துள்ளது என்றும் தொடர்ந்து இருக்கும் என்றும் பிரதமர் லீ வலியுறுத்தினார். மியன்மார் மீண்டும் பழைய நிலைக்கும் நிலைத்தன்மைக்கும் திரும்புவதற்கு நேற்றைய கூட்டம் குறிப்பிடத்தக்க ஒரு தொடக்கம் என்றார் திரு லீ.

