இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று இரண்டாம் அலை மோசமாகி உள்ளதால் அங்கு ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையை அடுத்து, அந்நாட்டிற்கு உதவி செய்யும் விதமாக சிங்கப்பூர் உயிர்
வாயுக் கலன்களைக் இரண்டு விமானங்களில் அனுப்பியுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை, 256 உயிர்
வாயுக் கலன்களை இரண்டு சி-130 விமானங்களில் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பியது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருநாட்டு உறவை நேற்று மறுவுறுதி செய்த இரண்டாம் வெளியுறவு அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இந்தியாவுக்கு சிங்கப்பூர் துணையாக நிற்கும் என்று தெரிவித்தார்.
இருநாட்டு மக்களுக்கும் அரசாங்கங்
களுக்கும் இடையே உள்ள அணுக்கமான உறவால் இது சாத்தியமாகி இருப்பதாக பாய லேபார் விமான நிலையத்தில் விமானங்களை வழி அனுப்பியபோது டாக்டர் மாலிக்கி கூறினார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி. குமரனிடம் இந்த மனிதாபிமான உதவியை ஒப்படைத்தபோது பிரதமர் அலுவலக அமைச்சருமான டாக்டர் மாலிக்கி இவ்வாறு கூறினார்.
அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டம், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள பல அமைப்பு நிலையிலான ஒத்துழைப்பும் பங்காளித்துவமும் அணுக்கமாக இருப்பதைக் காட்டுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"நாடு, இனம் போன்ற வித்தியாசங்களை கொவிட்-19 கிருமித்தொற்று பார்ப்பதில்லை. அதேபோல நாமும் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் ஆதரிக்க வேண்டும்," என்று டாக்டர் மாலிக்கி ஓஸ்மான் தெரிவித்தார்.

