இந்தியாவில் கொவிட்-19 இரண்டாவது அலை மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கிறது. டெல்லி, மும்பை, லக்னோ, புனே போன்ற பெரும் நகர்களை ஒரு கை பார்த்துவரும் அந்தக் கிருமி, இப்போது சிறிய நகர்கள், பேரூர்கள், கிராமங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கி இருப்பதாக அபாயச் சங்கு ஊதப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்ரகாண்ட், பீகார் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கிராமப் பகுதிகளில் பெரும் நகர்கள் அளவுக்கு அவலநிலை ஏற்படக் கூடிய வாய்ப்பு உருவாகி இருப்பதாக பலரையும் மேற்கோள்காட்டி பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இவ்வேளையில், ஒரு நாளில் புதிதாக கொவிட்-19 தொற்றியோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 379,257 ஆக உயர்ந்தது என்றும் மரண எண்ணிக்கை 3,645 ஆகிவிட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்தியா முழுவதுமே இப்போது அதிகமாக சிறார்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள் என்றும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் மேம்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள், பெற்றோர், அதிகாரிகள் அனைவருமே ஒருமித்த குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
பல மாநிலங்களிலும் ஆக்சிஜன், மருந்துகள், சிகிச்சை சாதனங்கள், மருத்துவமனைகளில் இடங்கள் எல்லாம் பற்றாக்குறையாகிவிட்டன.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த இந்திய அரசாங்கம் 16 ஆண்டுகளில் முதல் தடவையாக பெரிய அளவில் தன்கொள்கையை மாற்றிக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்புகளை, நன்கொடைகளை, உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
சீனாவில் இருந்தும் ஆக்சிஜன் தொடர்பான சாதனங்களையும் உயிர்காப்பு மருந்துகளையும் இந்தியா ஏற்க தயாராக இருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
உதவிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு இரண்டு விமானங்கள் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு இந்தியாவில் தரையிறங்கி இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலே குடாசேவ் கூறினார்.
ஆக்சிஜன் சாதனங்கள், சுவாச சாதனங்கள், கண்காணிப்புச் சாதனங்கள், மருந்துகள் முதலான பலவும் அவற்றில் அடங்கும்.
இதேபோல, $100 மில்லியன் மதிப்புள்ள உதவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கத் தொடங்கிவிட்டது என்றும் முதலாவது உதவி விமானம் அமெரிக்காவைவிட்டு புறப்பட்டுவிட்டதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா சூழ்நிலை மோசமடைவதால் அந்த நாட்டைவிட்டு கூடுமானவரை விரைவாக வெளியேறிவிடும்படி தன் குடிமக்களுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 2வது அலை அடுத்த 20 நாட்களில் உச்சத்தைத் தொடக்கூடும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வல்லுநர்கள் அறிக்கை கூறியது.

