சிங்கப்பூரில் நேற்று புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றிய 35 பேரில் 16 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். அவர்களில் எட்டு பேருக்கு டான் டோக் செங் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் ஒரு தாதியிடம் இருந்து தொற்று பரவி இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மருத்துவமனை வார்டுகளில் வேலை பார்க்கின்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை தன்னுடைய வார்டுகளில் வருகையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று இந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.
சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி நோயாளி களையும் ஊழியர்களையும் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கிறது என்று இந்த மருத்துவமனை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பிலிப்பீன்சை சேர்ந்த 46 வயது தாதிக்கு தொற்று இருந்தது புதன்கிழமை உறுதியானது. அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வார்டை சேர்ந்த ஊழியர்களையும் நோயாளி களையும் பரிசோதித்ததன் மூலம் மொத்தம் எட்டுப் பேருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மருத்துவரும் மூன்று நோயாளிகளும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தாதி இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவருக்கு இருமல், உடல்வலி, தொண்டை எரிச்சல் அறிகுறிகள் செவ்வாய்க்கிழமை தெரியவந்தன.
அதையடுத்து அவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்று புதன்கிழமை உறுதியானது. அந்தத் தாதி பணியாற்றும் வார்டு 9டி மூடப்பட்டு இருக்கிறது.
அதைச் சேர்ந்த அனைத்து நோயாளிகளுக்கும் ஊழியர் களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, டான் டோக் செங் மருத்துவமனையில் தொற்றுக் குழுமம் ஏற்பட்டு இருப்பது கவலைக்கு உரியதுதான் என்றாலும் அளவுக்கு அதிக கவலை தேவையில்லை என்று பல்வேறு வல்லுநர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
"கிருமித்தொற்றுக்கு மருத்துவமனைகளும் இலக்காகும் என்பதை நினைவூட்டுவதாகவே இந்த நிலவரம் இருக்கிறது.
"தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுக்க வேண்டிய அவசியத்தையும் இது நினைவூட்டுகிறது," என்று அவர்கள் கூறினர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதார துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரிமி லிம், "இன்னும் நாம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையே மருத்துவமனை நிலவரம் வலியுறுத்துகிறது. என்றாலும் அளவுக்கு அதிக அச்சம் கொள்ளத்தேவையில்லை," என்று கூறினார்.
புலன்விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை ஊகச்செய்திகளை வெளியிடாமல் இருக்கும்படி மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
"நல்ல வேளையாக, அந்த மருத்துவமனையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது,'' என்று அதே துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் லியாங் கூறினார்.
இவ்வேளையில், நேற்று சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் இதர ஏழு பேர் சாங்கி விமான நிலைய முனையம் 1ல் வேலை பார்த்த குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணைய அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
சமூகத்தொற்றுக்கு ஆளான 16 பேரில் இதர ஒருவரைப் பற்றிய விவரம் தெரி விக்கப்படவில்லை. நேற்று வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் யாருக்கும் புதிதாகத் தொற்று இல்லை என்றும் அமைச்சு அறிவித்தது.
புதிதாகக் கிருமி தொற்றியோரில் 19 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, சுகாதார அமைச்சின் வழிகாட்டி நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி முழு விழிப்பு நிலையில் இருந்து வருவதாக இங்குள்ள இதர மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.