பாலர் பள்ளிகளிலும் ஆரம்பகால இடையீட்டு மையங்களிலும் கடுமையாகும் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள்
பாலர் பள்ளிகளிலும் ஆரம்பகால இடையீட்டு மையங்களிலும் நாளை மறுநாள் சனிக்கிழமையில் இருந்து கூடுதல் நுழைவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிதாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தவிர மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் அங்கு நுழைய முடியாது.
வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றுகலக்க அனுமதி இல்லை. அத்துடன், குழந்தைகளுக்கான வெளியிடப் பயணங்களுக்கும் வெளியிடங்களில் பெரிய குழுக்களாக இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது.
தேசிய அளவிலான கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்படி பாலர் பள்ளிகளிலும் ஆரம்பகால இடையீட்டு மையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்படுவதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நேற்று தெரிவித்தது.
இருப்பினும், இம்மாதம் 17ஆம் தேதியில் இருந்து டிரேஸ்டுகெதர் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை.
அதிக துப்புரவுப் பணிகள், நாள்தோறும் மும்முறை உடல்வெப்பநிலை மற்றும் உடல்நிலைப் பரிசோதனை உள்ளிட்ட இப்போதுள்ள கொவிட்-19 விதிமுறைகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும்.
உரிமம் வழங்குதல் போன்ற தேவையான செயல்பாடுகளை மேற்கொள்வோர், புதிதாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போன்றோரைத் தவிர மற்றவர்கள் நாளை மறுநாள் முதல் இம்மாதம் 30ஆம் தேதிவரை அந்நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பெற்றோர்-ஆசிரியர் கருத்தரங்குகளை இணையம் வழியாக நடத்துமாறும் மாணவர்களுக்கு மெய்நிகர் முறையில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளுமாறும் பாலர் பள்ளிகளும் ஆரம்பகால இடையீட்டு மையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
செறிவூட்டல் நடவடிக்கைகள் போன்ற துணைத் திட்டங்களை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகபட்சம் நான்கு பாலர் பள்ளிகளுக்கு மட்டும் சேவை வழங்க அனுமதிக்கப்படுவர். மையங்களுக்கு இடையே கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
ஆயினும், வளர்ச்சி ஆதரவுத் திட்டங்களை வழங்குவோர்க்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
குழந்தைகளின், பணியாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, குழந்தைகள் தங்களது வகுப்பிலும் சிறு குழுக்களாகவும் இடம்பெறும் நடவடிக்கைகளில் பங்குகொள்ள மட்டுமே குழந்தைகள் அனுமதிக்கப்படுவர். குழு நடவடிக்கைகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை எட்டில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில், சிறு குழுக்களாக வெளிப்புற நடவடிக்கைகளைத் தொடரலாம்.
இருப்பினும், கற்றல் பயணங்கள் போன்ற பெரிய அளவிலான வெளிப்புற நடவடிக்கைகளைத் தள்ளிவைக்க வேண்டும் என பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.
வெளியிடங்களில் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள இப்போது ஏதேனும் திட்டமிட்டிருந்தால் அவற்றைத் தள்ளிவைக்கும்படி அனைத்து மையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பணியாளர் சந்திப்புகளும் பயிற்சிகளும் இணையம் வழியாக நடத்தப்பட வேண்டும்.

