'கட்டுப்பாடுகள் இருந்தும் குடும்பப் பிணைப்பு வலுவானது'

'கட்டுப்பாடுகள் இருந்தும் குடும்பப் பிணைப்பு வலுவானது'

2 mins read
f67f5418-5c56-4cec-889c-107e34ac586c
குடும்பத்தாருடன் ஹபிடா மற்றும் அவரின் கணவர். படம்: ஹபிடா -

நோன்புப் பெருநாளைக் கடந்த ஆண்டு ஹபிடா ஷா, 34, கொண்டாடியபோது, கிருமி முறியடிப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தன. புதிதாகத் திருமணமாகி இருந்ததால் அது அவரது தலைப் பெருநாளும் கூட. அடுத்த கொண்டாட்டம் சிறப்பாக அமையும் என்று இவ்வாண்டின் நோன்புப் பெருநாளுக்காக காத்திருந்த ஹபிடா, மீண்டும் ஏமாற்றம் அடைந்தார். நினைத்ததுபோல இவ்வாண்டின் கொண்டாட்டம் அமையவில்லை என்று சற்று ஆதங்கம் தொனிக்கும் குரலில் கூறினார் நிதி ஆலோசகராகப் பணிபுரியும் ஹபிடா.

"உறவினர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. கடைசியாக என் திருமணத்தின்போதுதான் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்," என்றார்.

அவரின் பாட்டி 75 வயது பாத்தி முத்து ஹாஜா மைதீனின் வீட்டில் ஹபிடா இவ்வாண்டு நோன்புப் பெருநாளைக் கொண்டாடினார். குடும்பத்தினருக்கு பூலோர் வாஜேட், அகார் அகார், முறுக்கு ஆகியவற்றைச் செய்ததாக திருமதி ஹபிடாவின் பாட்டி திருமதி பாத்தி முத்து தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றுகூட முடியவில்லை என்ற வருத்தம் தமக்கு இவ்வாண்டு இருந்தாலும் அடுத்த நோன்புப் பெருநாளின்போது அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்று அந்த மூதாட்டியும் கூறினார்.

ஒன்றுகூடல் தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் நேரில் காண முடியாதவர்களுடன் காணொளி வழியாக இணைந்து கொண்டாடியதாக திருமதி ஹபிடா கூறினார்.

"கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்னர் நாங்கள் ரமலான் மாதத்தின்போது பள்ளிவாசல்களில் தொழுவது வழக்கம். ஆனால் இம்முறை நோன்பு மாதத்தின்போது வீட்டிலேயே அதிகம் கூட்டுத் தொழுகை மேற்கொண்டோம். குடும்பமாக இணைந்து அவ்வாறு செய்தது எங்களுக்குள் பிணைப்பை வலுப்படுத்தியது," என்று அவர் கூறினார்.

அடுத்த கொண்டாட்டத்தின்போது உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் ஒரே கூரையின்கீழ் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கழிக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் திருமதி ஹபிடா.