நாளையில் இருந்து கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன; உணவங்காடிகளில் அமர்ந்து உண்ண முடியாது
சமூகத்தில் கொவிட்-19 தொற்று பரவுவது சற்று கூடியுள்ளதையடுத்து, அதைத் தடுக்கும்விதமாகக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சமூக ஒன்றுகூடல்களில் இருவருக்குமேல் இடம்பெற அனுமதியில்லை. உணவகங்களிலும் உணவங்காடி நிலையங்களிலும் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. வீடுகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரு வேறு வருகையாளர்களை மட்டுமே வரவேற்க முடியும். அதேபோல், தனிநபர்கள் நாளொன்றுக்கு இரு சமூக ஒன்றுகூடல்களுக்குமேல் பங்கேற்கக்கூடாது.
இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.
பணியிடங்களைப் பொறுத்தமட்டில், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடரவேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் பணியாளர்கள், அவ்வாறே வேலையைத் தொடர்வதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கடந்த சில வாரங்களில் பொதுமக்களில் பலரும் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருக்கலாம் என்பதாலும் அவர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் கூறினார்.
சமூகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தெரியாமல் மறைந்திருக்கலாம் எனும் கவலை எழுந்துள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார். முன்னர் பாதிக்கப்பட்ட எவருடனும் தொடர்பில் இல்லாதபோதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் இப்போதுள்ள 11 கிருமித் தொற்றுக் குழுமங்களில் ஒன்றான சாங்கி விமான நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.
குடும்பங்களின் இப்போதைய குழந்தைப் பராமரிப்பு ஏற்பாடுகளைத் தொடரலாம் என்றும் பேரக் குழந்தைகளை அன்றாடம் தாத்தா-பாட்டிமார் பார்த்துக்கொள்வது இரு வருகையாளர் வரம்புக்குள் வராது என்றும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியது.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த பேரப்பிள்ளைகளுடன் ஒன்றுகலப்பதைக் குறைத்துக்கொள்ளவும் தாத்தா-பாட்டிமார் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
இந்நிலையில், அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து, தேவையின்றி வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்குமாறும் அரசின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது, டிரேஸ்டுகெதர் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார்.
மே 16 முதல் ஜூன் 13 வரை...
♦ உணவு நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாது; வாங்கிச் செல்ல, விநியோகிக்க மட்டும் அனுமதி.
♦ சமூக ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் இருவர் மட்டுமே இடம்பெறலாம்.
♦ வீடுகளில் நாளொன்றுக்கு இரு வேறு வருகையாளர்களை மட்டும் வரவேற்கலாம்.
♦ வழிபாட்டுத் தலங்கள், திரை அரங்குகள், நேரடி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனையுடன் அதிகபட்சம் 100 பேரையும் பரிசோதனையின்றி 50 பேரையும் அனுமதிக்கலாம்.
♦ திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை.
♦ ஈமச்சடங்குகளில் 20 பேர்வரை பங்கேற்கலாம்.

