இந்தியாவின் குஜராத் மாநிலத்தை நோக்கி மிக மோசமான 'டவ்தே' புயல் விரைவதாக இந்திய வானிலை மையம் நேற்று அபாய சங்கு ஒலித்தது.
வானிலை மையத்தின் முன்னுரைப்பின்படி அது நேற்றிரவு கரையைக் கடந்திருக்கும்.
இதை மிக மோசமான புயல் என்று மையம் வகைப்படுத்தியுள்ளது.
மணிக்கு 210 கிலோமீட்டர் வேகம் வரை புயல் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'டவ்தே' புயல் இதுவரை கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய கடலோர மாநிலங்களைப் பதம் பார்த்து பெருத்த சேதத்தை ஏற்
படுத்தியுள்ளதாக இந்திய
அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலின் சீற்றம் காரணமாக அந்த மாநிலங்களில் குறைந்தது 12 பேர் மாண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
"கடந்த 20 ஆண்டுகளில் இதுவே குஜராத்தைத் தாக்கும் ஆக மோசமான புயல். இதை 1998ஆம் ஆண்டில் குஜராத்தை உலுக்கிய புயலுடன் ஒப்பிடலாம். அது மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குஜராத் மாநிலத்தின் வருவாய்த் துறை செயலாளர் பங்கச் குமார் தெரிவித்தார்.
1998ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயலின் காரணமாக குஜராத்தில் குறைந்தது 4,000 பேர் மாண்டனர்.
ஏற்கெனவே மளமளவென அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் குஜராத்துக்கு கூடுதல் நெருக்குதலை இந்தப் புயல் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, முன்னெச்
சரிக்கை நடவடிக்கையாக
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 150,000 பேரை அவர்களது வீடுகளிலிருந்து குஜராத் அதிகாரிகள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருப்பதாக இந்திய ஊடகம் தெரிவித்தது. ஏறத்தாழ 50
மீட்புப் பணியாளர் குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் குஜராத் அரசு கூறியது.
அதுமட்டுமல்லாமல், குஜராத்தில் உள்ள துறைமுகங்களும் பிரதான விமான நிலையமும் மூடப்பட்டுள்ளன.
புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி உறுதி அளித்துள்ளார்.

