சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 'ஃபைசர்-பயோஎன்டெக்' நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவரான அவர், நேற்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
இக்குறிப்பிட்ட வயதினருக்கு 'ஃபைசர்-பயோஎன்டெக்' தடுப்பூசி போடுவது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் அதன் ஒப்புதலை அளித்துள்ள நிலையில், கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பிலான நிபுணர் குழுவும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அமைச்சர் ஓங் கூறினார்.
"இந்த வயது பிரிவினருக்கு அதிகச் செயல்திறன், பாதுகாப்பு தரவல்லதாக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி உள்ளது என இரு சாராரும் (நிபுணர் குழு மற்றும் ஆணையம்) மதிப்பிட்டுள்ளனர்," என்றார் திரு ஓங். இதற்கிடையே, 12 முதல் 15 வயது மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து செயல்படும் என்றும் விரைவில் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக கொவிட்-19 கிருமியின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக் பகிர்ந்துகொண்டார். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் சிறுவர்களிடம் குறைந்த அளவு விழிப்புநிலையும் கட்டொழுங்கும் இருப்பதாகவும் சுட்டினார்.
இக்குறிப்பிட்ட வயதினருக்கான தடுப்பூசித் திட்டம், முன்னுரிமை பெறுவது குறித்து பின்னாளில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசித் திட்டம் தொடர்பில் சிங்கப்பூர் பல்வேறு தடங்களைக் கொண்டுள்ளதாக கூறிய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், அதில் ஒன்று கல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் மீது கவனம் செலுத்துவது என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், தங்களின் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதால் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்குக் கவலை ஏற்படலாம் என்று கூறிய பேராசிரியர் மாக், பெரியவர்களுக்குக் கிடைக்கும் அதே செயல்திறன், பாதுகாப்பு 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.