புளோக் 506 ஹவ்காங் அவென்யூ 8ல் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. கிருமித்தொற்று பாதிப்பு உடைய சிலர் அங்கு வசிப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அந்த புளோக்கின் வெற்றுத்தளத்தில் இந்தக் கட்டாய பரிசோதனை நடவடிக்கை இன்றும் (மே 21) நாளையும் (மே 22) நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று (மே 20) தெரிவித்தது.
இது குறித்த துண்டுப்பிரசுரங்கள் குடியிருப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. குறுஞ்செய்தி தகவலும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களது உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்குமாறும் உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பார்க்குமாறும் அமைச்சு அறிவுறுத்தியது.