டெல்லி முதல்வரின் ஆதாரமற்ற பொய்யான கருத்து
சிங்கப்பூர் அரசாங்கம், கிருமிப் பரவலை முற்றிலும் தடுத்து நிறுத்தும் தலையாய பணியில் ஈடுபட்டுள்ளது.
மற்றொரு கிருமிப் பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அது முழுக் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வேளையில் டெல்லி முதல்வரின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் கொவிட்-19க்கு எதிரான கவனத்தை சிதறவிட விரும்பவில்லை என்று இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் புதிய உருமாறிய கிருமி தென்படுவதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் தெரிவித்த கருத்துகளால் எழுந்துள்ள துரதிர்ஷ்டவசமான அத்தியாயத்தைக் கடந்து செல்ல விரும்புவதாகவும் புதன்கிழமை அன்று சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், சிங்கப்பூர் இதிலிருந்து விலகி அடுத்த கட்டத்துக்கு நகர விரும்புவதாக திரு வோங் செய்தியாளர்களிடம் சொன்னார்.
குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் டுவிட்டர் பதிலால் மனநிறைவு பெறுவதாகவும் அவர் கூறினார்.
டாக்டர் ஜெய்சங்கர், முன்பு சிங்கப்பூரில் இந்தியாவுக்கான தூதராகப் பணியாற்றியவர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கருத்து பொறுப்பற்றது என்றும் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் டுவிட்டர் பதிவில் கூறியிருந்த திரு ஜெய்சங்கர், கொவிட்-19க்கு எதிரானப் போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் உறுதியான பங்காளிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
டெல்லி முதல்வர் இந்தியா சார்பில் பேசவில்லை என்பதையும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
"இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதிப்பவர்களே பேசி பதிலளித்து தெளிவு படுத்திவிட்டதால், இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட விரும்பு கிறோம்," என்றார் திரு வோங்.
டெல்லி முதல்வர் அண்மையில் வெளியிட்ட உண்மையில்லாத கருத்தால் புதிய சர்ச்சை வெடித்தது.
இந்தி மொழியில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிங்கப்பூரில் உருமாறிய கிருமி, குழந்தை களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அது இந்தியாவில் 3வது கிருமித்தொற்று அலையை ஏற் படுத்தக்கூடும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இது குறித்து மேலும் பேசிய சிங்கப்பூர் தூதர் வோங், "முக்கிய அரசியல்வாதிகள் பொறுப்பற்ற முறையில் பொய்யான கருத்துகளை வெளியிடக்கூடாது. இதே போன்ற கருத்தை அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வெளியிட்டால் 'பொஃப்மா' எனும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க சிங்கப்பூருக்கு உரிமையிருக்கிறது," என்றார்.
சிங்கப்பூர் ஒட்டுெமாத்த நாடுகளுடன் சேர்ந்து கொவிட்-19க்கு எதிராக போராடவே விரும்புகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா, தற்போது 2வது கிருமிப் பரவல் அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவுக்கு முக்கிய உயிர் காக்கும் உதவிப்பொருட்களை வழங்கி வருகின்றன.
சுமார் 8,000 உயிர்வாயு உற்பத்தி சாதனங்கள், 12,000 உயிர்வாயு தோம்புகள் மற்றும் 64 உயிர்வாயு சேமிப்பு கலன்களை இந்தியாவுக்கு சிங்கப்பூர் அனுப்பவிருக்கிறது.
"சிங்கப்பூரின் உதவியால் டெல்லியே அதிகம் பலனடைகிறது.
"இந்நிலையில் டெல்லி முதல்வரின் பேச்சு எங்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் இந்த விவகாரத்தால் சிங்கப்பூரின் உதவி நின்று விடாது," என்று சிங்கப்பூர் தூதர் வோங் உறுதியளித்தார்.

