கொவிட்-19 கிருமித்தொற்று சிறப்பு சோதனை நடவடிக்கையில் மேலும் 10 சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19 தொற்று குழுமம் உருவானதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் கிட்டத்தட்ட 19,000 பேருக்கு கொரோனா கிருமி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த 10 பேருடன் சேர்த்து மொத்தம் 43 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் (சிஏஏஎஸ்) சாங்கி விமான நிலையக் குழுமமும் (சிஏஜி) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
ஏனைய 33 பேருக்கும் வேறு சோதனைகளின் போது தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோதோ அல்லது வழக்கமான கொரோனா பரிசோதனையின்போதோ தொற்று உறுதியானது.
சாங்கி விமான நிலைய கிருமித்தொற்று குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பில் இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.
சாங்கி விமான நிலையத் தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நேற்றைய கணக்கு 100 ஆக இருந்தது. தற்போது ஆகப் பெரிய தொற்றுக்குழுமமாக இது உள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ள முதல் கட்ட ஊழியர்கள் பி1617 உருமாற்றக் கிருமியாலும் அதை ஒத்த கிருமியாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது, இந்தத் தொற்றுகளின் மூலம் பொதுவான ஒன்றாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது என்று சிஏஏஎஸ், சிஏஜி இரண்டும் கூறின.
"சென்ற 29ஆம் தேதி ஏப்ரல் 2021 அன்று தெற்காசியாவில் இருந்து வந்த ஒரு குடும்பத்திற்கு உதவி செய்த ஒரு விமான நிலைய ஊழியர் மூலமாக ஆரம்ப கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. வருகையின்போது நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் அந்தக் குடும்பத்திற்கு தொற்று இருப்பது தெரியவந்தது," என்று அவை இரண்டும் கூறின.
அந்தக் குடும்பம் எந்த நாட்டிலிருந்து வந்தது என்பதை அவை குறிப்பிடவில்லை.
மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் முறை நடத்தப்பட்ட சோதனையில் தொற்று காணப்படாத முனையம் 3 கீழ்த்தளம் 2ஐ சுற்றி பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும், அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் வருகையின்போது, வழக்கமான பல்படிய தொடர்வினை (பிசிஆர்) சோதனையுடன் ஆன்டிஜன் விரைவு சோதனையும் (ஏஆர்டி) செய்ய வேண்டும்.
"பிசிஆர் சோதனையைவிட ஏஆர்டி சோதனையில் முடிவுகள் விரைவாகத் தெரிவதால், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு பொது சுகாதார நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும்.
"நாளை, மே 23ஆம் தேதி முதல் அதிக ஆபத்துள்ள பணிகளை மேற்கொள்ளும் விமான நிலைய ஊழியர்கள் வழக்கமாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் கிருமி பரிசோதனையில் கூடுதலாக ஏஆர்டி பரிசோதனையும் செய்ய வேண்டும்," என்று சிஏஏஎஸ், சிஏஜி ஆகியவை கூறின.
இதற்கிடையே, சாங்கி விமான நிலையம், ஜுவல் ஆகியவற்றின் முனையங்கள் ஜூன் 13ஆம் தேதி வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
புதிதாக 40 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் நேற்று 40 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 30 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் எண்மர் கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பு இல்லாதவர்கள். இதர 22 பேரும் ஏற்கெனவே தொற்று இருந்தோருடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்களில் 16 பேர் முன்பே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இங்கு வந்தவர்களில் எட்டு பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 61,770 ஆக அதிகரித்து உள்ளது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆகி உள்ளது.
அண்மைய சில நாட்களில் கொவிட்-19 காரணமாக மரணமடைந்த இரண்டு பேரில் 70 வயது சிங்கப்பூரர் ஒருவர். இவர் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார்.
மற்றொருவரான 88 வயது சிங்கப்பூர் மாது மே 1ஆம் தேதி மாண்டார். இந்த இருவரும் புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், வாதம் போன்ற நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள்.
இதனிடையே, வியாழக்கிழமை சமூகத்தில் புதிதாக 27 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர்களில் சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர், ஒரு கைதி, பொங்கோலில் இருக்கும் ஈட்டர்ன் மெடிக்கல் கிளினிக் என்ற மருந்தகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஆகியோரும் அடங்குவர். அவர்களில் 15 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
ஆறு பேருக்குத் தொடர்பு இல்லாமல் தொற்று ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. 17 பேர் முந்தைய தொற்றுக் குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.
வியாழக்கிழமை மொத்தம் 41 பேருக்குத் தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவில் இருந்தவர்கள். மருத்துவமனையில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர கண்காணிப்பில் நான்கு பேர் கவனிக்கப்பட்டு வருகிறார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

