பாசிர் ரிஸ்ஸில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேருக்கு கிருமித் தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய அந்தப் புளோக்கில் வசிக்கும் 243 பேருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ல் இருக்கும் புளோக் 559 குடியிருப்பாளர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் டான் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட புளோக்கில் 79 வீடுகள் இருக்கின்றன என்று தெரிகிறது.
அந்தப் புளோக்கிற்குப் பக்கத்தில் இருக்கும் புளோக்குகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குப் பரிசோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் மே மாதம் 2ஆம் தேதிக்குப் பிறகு யாராவது பாதிக்கப்பட்ட புளோக்கிற்குச் சென்று வந்திருந்தால் அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் டெஸ்மண்ட் டான் மேலும் தெரிவித்தார்.
அந்தப் புளோக்கில் நான்கு பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பற்றி முன்னதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
அந்தப் புளோக்கில் குடியிருப்போருக்கு முன்பு கோரல் தொடக்கப்பள்ளி இருந்த இடத்தில் செயல்படும் வட்டார பரிசோதனை நிலையத்தில் நேற்றும் இன்றும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
இது பற்றிய மேல் விவரங்கள் குடியிருப்பாளர்களுக்குத் துண்டு வெளியீடுகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டு உள்ளதாக திரு டான் தெரிவித்தார்.
ஹவ்காங் புளோக்கில் 10 பேருக்குத் தொற்று
தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் சேர்ந்து எண் 559 புளோக்கை யும் அருகில் உள்ள புளோக்குகளையும் பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் முற்றிலும் சுத்தப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பாசிர் ரிஸ் புளோக், கொவிட்-19 கிருமி தொற்று தலைகாட்டி உள்ள இரண்டாவது வீவக புளோக் ஆகும்.
ஹவ்காங் அவென்யூ 8ல் இருக்கும் புளோக் 506ல் வசிக்கும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்குத் தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
அந்த 'புளோக்' வாசிகளுக்கு நடத்தப்பட்ட கட்டாய பரிசோதனை மூலம் தொற்று இருந்ததாகத் தெரியவந்த தனிப்பட்ட ஒருவரும் அவர்களில் அடங்குவார்.
ஹவ்காங் புளோக்கில் சென்ற வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் 407 பேருக்குப் பரிசோதனைநடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
மேலும் 126 பரிசோதனை முடிவுகள் இனிமேல்தான் வரவேண்டும் என்றும் அவை கூறின.
கிருமி தொற்றியதாகக் கண்டறியப்பட்ட 10 பேரில் பெரும்பாலானவர்கள் தனிமையில் இருந்தவர்கள். அவர்களுக்குத் தொற்று இருந்தது பின்னர் தெரியவந்தது.
அதாவது முன்னதாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள். தொற்றுடன் அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்று அமைச்சுகள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட நான்கு வீடுகளும் ஒன்றுக்கொன்று மேலே அல்லது கீழே, அருகே இருக்கும் வீடுகள் என்றாலும் காற்று மூலம் வேறு யாருக்கும் கிருமி பரவி இருக்கக்கூடிய வாய்ப்பு அநேகமாக இல்லை என்பது தொடக்க மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ள தாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய புலன்விசாரணை நடந்து வருகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நகர மன்றத்துடன் சேர்ந்து துப்புரவு நடைமுறைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
அதேநேரத்தில், கூடுமான வரை கண்காணிப்புகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்ட புளோக்கில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
இந்த ஹவ்காங் புளோக் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ள வீவக புளோக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.