சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் இப்போது 'வந்தே பாரத்' பயணிகள் விமானச் சேவை மட்டும்தான் நடந்து வருகிறது.
அந்த விமானங்களில் சராசரி யாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 180 பேர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 25 பேர் சிங்கப்பூர் வருகிறார்கள். இங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமக்களாக அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கிறார்கள்.
போக்குவரத்து அமைச்சும் வெளியுறவு அமைச்சும் மனிதவள அமைச்சும் ஊடகக் கேள்விகளுக்கு கூட்டறிக்கை மூலம் நேற்று அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தன.
இந்தியா 2020 மார்ச் முதல் தன் நாட்டில் இருந்து அனைத்துலக விமானங்கள் புறப்பட்டுச் செல்லவும் தரையிறங்கவும் தடைவிதித்து இருக்கிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவிற்குச் சரக்கு விமானச் சேவையை மட்டுமே இப்போது நடத்த முடியும். வெளிநாடுகளில் உள்ள குடிமக்களைத் தன் நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக இந்திய அரசாங்கம் வந்தே பாரத் சேவையை நடத்தி வருகிறது.
சிங்கப்பூருக்கு இப்போதுள்ள பயணிகள் விமானச் சேவை இது மட்டும்தான் என்பதால் இங்கு திரும்ப விரும்புவோர் இந்த விமானத்தில் புறப்பட்டு வர இந்திய அரசாங்கம் அனுமதிக்கிறது.
இந்தச் சேவையை இந்திய அரசு நியமிக்கும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதியுடன் நடத்துகின்றன.
இப்போது இத்தகைய பயணிவிமானச் சேவைகள் எல்லாம் சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் செயல்படுகின்றன.
சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து பயணிகளும் இங்கு வரும்போது இரண்டு வகை கொவிட்-19 பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.
தரையிறங்கியதும் அதற்கே உரிய வாகனங்களில் அவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.
இந்தியா போன்ற தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களைக் கையாளும் ஊழியர்கள் முழு பாதுகாப்பு உடை சாதனங்களுடன் செயல்படு கிறார்கள்.