இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்
கொவிட்-19 இரண்டாவது அலை இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது அதன் தாக்கம் சீராகக் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக அங்கு ஒருநாள் பாதிப்பு இருநூறாயிரத்திற்கும் குறைவாகப் பதிவாகி இருக்கிறது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அங்கு 196,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 3,511 பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 26,948,874 ஆகவும் உயிரிழப்பு 307,231 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த பல நாள்களாக, நாள்தோறும் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 4,000 என்ற எண்ணிக்கையை ஒட்டியே இருந்தது அரசாங்கத்திற்கும் நிபுணர்களுக்கும் கவலை அளிப்பதாக இருந்து வந்தது.
இந்நிலையில், கிருமிப் பரவல் அதிகமாக இருந்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய பாதிப்பு குறைந்து வருகிறது. இது, இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் தணியத் தொடங்கிவிட்டதைக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பல மாநிலங்களும் கட்டுப்பாடுகளை நீட்டித்திருக்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், நாகலாந்து, மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கோவா ஆகிய மாநிலங்கள் கிட்டத்தட்ட முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளன.
தொடர்ந்து பதினொன்றாம் நாளாக, புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.
அதிக தகவல் கோரும் உலக நிறுவனம்
இதனிடையே, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொவேக்சின் தடுப்பு மருந்தை 'அவசரகால கொரோனா தடுப்பு மருந்துப் பட்டியலில்' சேர்க்க கூடுதல் தகவல் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவசரகாலப் பயன்பாட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான 90% ஆவணங்களை உலக சுகாதார நிறுவனத்திடம் ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டதாக ஹைதராபாத் நகரை மையமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய அரசாங்கத்திற்குத் தகவல் அனுப்பியுள்ளது.
உலக சுகாதார நிறுவனப் பட்டியலில் இடம்பெறாததால், வெளிநாடுகள் எல்லைகளைத் திறக்கும்போது கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

