மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மாலையில் இரு இலகு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்தவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ரயில்கள் மோதிக்கொண்டதற்கு மனிதத் தவறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
"ரயில் ஓட்டுநர் தவறான திசையில் ரயிலை இயக்கியதே விபத்து நிகழக் காரணம்," என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று மெய்நிகர் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
மொத்தம் 213 பயணிகள் இருந்த ரயில் '40', கம்போங் பாரு நிலையத்தில் நின்றபின் அதன் தானியக்க அமைப்பு பழுதாகி விட்டது. அதனால், அந்த நிலையத்தில் இருந்து டாங் வாங்கி நிலையம் நோக்கி அதை கைமுறையாக இயக்கிச் செல்லும் படி அந்த ஓட்டுநர் பணிக்கப்பட்டார்.
ஆனால், ரயிலை தெற்கு நோக்கி இயக்காமல் அவர் வடதிசை நோக்கி இயக்கியதாகவும் அப்போது தெற்கு நோக்கி வந்துகொண்டிருந்த காலியான தானியக்க ரயில் மீது மோதிவிட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக திரு சியோங் விவரித்தார்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் 64 பேர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அமைச்சர், அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாகவும் 15 பேரின் நிலை பகுதியளவு கவலைக்கிடமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ரயில்கள் மோதியதில் 47 பேர் கடுமையாகக் காயமுற்றதாகவும் மேலும் 166 பேர் இலேசான காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சு உயரதிகாரிகளையும் ரயில் துறை நிபுணர்களையும் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று திரு சியோங் கூறினார்.
விபத்து தொடர்பில் விசாரணை நடத்தும்படி போக்குவரத்து அமைச்சையும் ரயில் சேவை வழங்குநரான 'பிரசாரனா மலேசியா' அமைப்பையும் கோரியிருக்கும் பிரதமர் முகைதீன் யாசின், கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, காயமடைந்த அனைவரின் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கும் பிரசாரனா அமைப்பு, விபத்தின்போது ரயிலில் இருந்த அனைவருக்கும் ஆயிரம் மலேசிய ரிங்கிட் இழப்பீடு (S$320) வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
"இவ்விபத்தின் காரணமாக எவரேனும் வருமானத்தை இழக்க நேரந்தால் அவரது வாழ்க்கைச் செலவுகளையும் பிரசாரனா ஏற்றுக்கொள்ளும்," என்று அமைச்சர் சியோங் கூறியுள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு கெலானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவை தொடங்கப்பட்டபின் அவ்வழித்தடத்தில் நிகழ்ந்த முதல் விபத்து இதுதான்.

