இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று கரையைக் கடந்த 'யாஸ்' புயலால் மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 300,000 வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாகவும் பத்து மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் தற்செயலாக உயிரிழந்துவிட்டதாக வும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தாம் நாளை பார்வையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிகத் தீவிர புயலான 'யாஸ்', ஒடிசா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி வாக்கில் கரையைக் கடந்தது. அப்போது 140-145 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அம்மாநிலத்தில் மரம் விழுந்து முதியவர் ஒருவரும் இளையர் ஒருவரும் மாண்டுபோனதாகக் கூறப்பட்டது.
கடலில் பெரும் உயரத்திற்கு அலைகள் எழுந்ததால் ஒடிசாவில் பல கடலோர கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. மாநிலத்தின் பல இடங்களிலும் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவானது. இன்று வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்திலும் ஒடிசாவிலும் ஐந்து விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன; விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

