கொவிட்-19 தொடர்பில் மக்களிடையே கொந்தளிப்பு; நாடாளுமன்றம் மீண்டும் கூட அறைகூவல்
கொவிட்-19 கொள்ளைநோயைக் கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், இவ்வாண்டு ஜனவரி மாதம் அவசரநிலையை அறிவித்தார். அதன்படி, நாடாளுமன்றம் கூடுவது நிறுத்திவைக்கப்பட்டது. இருப்பினும், கொவிட்-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர் மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக பதிவாகும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஜனவரியில் தினமும் பதிவான தொற்று எண்ணிக்கையைவிட இப்போது இருமடங்காகிவிட்டது. கொவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் முழுதும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள சில பெரிய மருத்துவமனைகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கான தடுப்பூசிப் பணிகளும் மும்முரமாக நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்பதற்கு மலேசியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவது ஓர் அறிகுறி என்றார் நாடாளுமன்ற துணை சபாநாயகரும் அம்னோ கட்சி உறுப்பினருமான திருவாட்டி அஸலினா ஒத்மான் சையது.
பொதுமக்களின் அவநம்பிக்கையை நாடாளுமன்ற பொது விவாதங்கள் மூலம் கையாள வேண்டும் என்று நேற்று அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
"கொவிட்-19 பல ஆண்டு காலம் நீடிக்கும் சாத்தியம் உண்டு. அப்படியென்றால் நாம் நிரந்தரமாக அவசரநிலையில் இருக்க முடியாது. நெருக்கடி காலங்களில் நாடாளுமன்றம் கூடுவதைத் தவிர்க்கும் ஒரே நாடாக நாம் இருக்க வேண்டுமா?" என்று அவர் வினவினார்.
மோசமடைந்து வரும் கொள்ளைநோய் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறை, கிருமித்தொற்று தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதில் பாரபட்சம் ஆகியவற்றால் அரசாங்கம் வெகுவாக விமர்சிக்கப்படும் நிலையில், அந்நாட்டு உள்ளூர் சமூக ஊடகங்களில் கடந்த சில மாதங்களாகவே மக்கள் தங்களின் குமுறலைக் கொட்டி வருகின்றனர்.
நடைமுறைகளைப் பின்பற்றியவாறு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்தாலே தமக்கு மகிழ்ச்சி என்று பிரதமர் முகைதீன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்காக தம்மை அவர்கள் 'அறிவற்ற பிரதமர்' என்று அழைத்தாலும் பரவாயில்லை என அவர் கூறியதுடன் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படாது என்றும் சொல்லிவிட்டார்.
"பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அவசரகால அமைச்சரவை கொண்ட ஓர் இடைக்கால அவசரநிலை அரசாங்கம் அமைக்கப்படலாம். அதில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெறலாம்," என்று திருவாட்டி அஸலினா கூறிய ஆலோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
நாட்டுக்காக ஒருமித்த கருத்தை நாடுவதற்கு நாடாளுமன்றமே களமாக இருக்க வேண்டும் என்று செனட்டர் லியூ சின் டோங் டுவிட்டரில் பதிவிட்டார்.

