மலேசியாவில் பதிவாகும் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ள நிலையில், நேற்று அங்கு 7,857 தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
மூன்றாவது நாளாக மலேசியாவில் இவ்வாறு 7,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியாகியுள்ளன. நேற்று முன்தினம் 7,478 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியாகின.
நேற்றைய எண்ணிக்கையுடன் மலேசியாவின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை தற்போது 541,224ஐ எட்டியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பதிவான 2,675 தொற்றுச் சம்பவங்களே ஆக அதிகம். அதற்கு அடுத்த நிலையில் சரவாக் மாநிலத்தில் 772 சம்பவங்களும் கிளந்தான் மாநிலத்தில் 754 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகியவற்றில் 500க்கும் மேற்பட்ட கொவிட்-19 சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
முழு ஊரடங்கைப் பரிசீலிக்கவும்
இதற்கிடையே நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் மலேசியாவின் கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்து ஜோகூர் மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர், மலேசிய அரசாங்கம் 'முழு ஊரடங்கு' நிலையைப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
எட்டு நாட்கள் தொடர்ச்சியாக 6,000க்கும் மேலான கிருமித்தொற்று சம்பவங்கள் மலேசியாவில் தினமும் பதிவாகி வருகின்ற நிலையில், புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு அறிவுறுத்தி இருந்தார்.
மலேசியர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்து தாங்களே வீட்டில் முடங்கி இருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அல்லது தங்களையே அறியாமல் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று அவர் விவரித்தார்.
"முடக்கநிலைக்குத் தயாராகும் நிலைப்பாடு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதை அது தடுக்கும். கொவிட்-19 எண்ணிக்கை குறைவதாக இல்லை என்றால் அரசாங்கமும் முழு ஊரடங்கு குறித்து பரிசீலிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார் மன்னர் இப்ராஹிம்.
கொள்ளைநோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஜூன் 7 வரை பிறப்பித்துள்ளது. இருப்பினும் பொருளியல் சார்ந்த பிரிவுகள் தொடர்ந்து இயங்கி வருவதால் சிலர் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்களப் பணியாளர்களின் பாரத்தைக் குறைக்கவும்
முன்களப் பணியாளர்கள், குறிப்பாக மருத்துவ ஊழியர்களின் நலன் கருதி சமூகத்தினர் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் மன்னர்.
"அவர்கள் களைத்து, சோர்ந்து போய் இருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தங்களின் கடமையிலிருந்து அவர்கள் தவறவில்லை. அவர்கள் கொவிட்-19 நோயுடன் மட்டும் போராடவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்," என்றார் மன்னர் இப்ராஹிம்.
உருமாறிய கிருமிகள் நாட்டில் தென்படுவது அச்சத்தை அளிப்பதாக தெரிவித்த அவர், இவ்வாறு தினமும் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போனால் மேலும் வேறு உருமாறிய கிருமிகள் வரக்கூடும் என்று பகிர்ந்துகொண்டார்.
அனைவருக்கும் பலன் கிட்ட வேண்டுமானால் அவரவர் தங்களின் பங்கை ஆற்றி, தொற்றுப் பரவலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

