சமூகத்தில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடப்பில் உள்ள நடைமுறைகள் இதுவரை பலன் தந்திருப்பதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (மே 28) தெரிவித்துள்ளார்.
“எனவே, கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கான தேவை இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை,” என்று அவர் கூறினார்.
எனினும், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, தங்களது வீடுகளுக்கு வெளியில் நடவடிக்கைகளையும் நடமாட்டத்தையும் குறைத்துக்கொள்வதன் மூலம் தங்களது பங்கையாற்ற வேண்டும் என்று திரு வோங் அறிவுறுத்தினார்.
இதுதொடர்பான முழு விவரங்கள், கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு வரும் திங்கட்கிழமை நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
ஏற்கெனவே கடுமையாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகங்களுக்கான மேம்பட்ட ஆதரவுத் திட்டங்களை அறிவிக்க இன்று மெய்நிகர் வழியாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது திரு வோங் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், சமூக அளவில் கிருமித்தொற்று எண்ணிக்கை நிலைப்பட்டிருப்பதாகச் சொன்னார்.
“சொல்லப் போனால், சமூகத்தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது,” என்றார் அவர்.