சிங்கப்பூரில் கடுமையாக்கப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வர்த்தகங்களும் ஊழியர்களும் சமாளிக்க உதவ, $800 மில்லியன் மதிப்பிலான ஆதரவு தொகுப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் மேம்பட்ட சம்பள மானியங்கள், வாடகைக் கழிவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த அறிவிப்பை இன்று (மே 28) வெளியிட்ட நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், பாதிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக்கூடங்கள், நிகழ்கலை, கலைப் படிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் உள்ளூர் ஊழியர்களுக்காக 50 விழுக்காடு சம்பள ஆதரவு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
தற்போது கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ள சூழலில் தங்களது செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்படைந்துள்ள தொழில்துறைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 30 விழுக்காடு சம்பள ஆதரவு வழங்கப்படும்.
சில்லறை வர்த்தகர்கள், தனிநபர் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள், அரும்பொருளகங்கள், கலைக்கூடங்கள், வரலாற்றுத் தளங்கள், திரையரங்குகள், உள்புற விளையாட்டு இடங்கள், இதர குடும்ப கேளிக்கை மையங்கள் ஆகியவற்றுக்கு இந்த ஏற்பாடு உதவும்.
எனினும், பேரங்காடிகள், பல்பொருள் அங்காடிகள், இணைய சில்லறை வர்த்தகங்கள் ஆகியவை இந்த மேம்பட்ட சம்பள ஆதரவுத் திட்டத்திற்குத் தகுதிபெற மாட்டா.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழங்கப்படும் சம்பளத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மேம்பட்ட வழங்கீட்டுத் தொகை, எதிர்வரும் செப்டம்பரில் விநியோகிக்கப்படும் என்று நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
உள்ளூர் ஊழியர்களை சம்பளமில்லா கட்டாய விடுப்பில் வைக்கும் அல்லது அவர்களை ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகள், அத்தகைய ஊழியர்களுக்காக வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கீட்டுத் தொகையைப் பெற தகுதிபெற மாட்டார்கள்.
இந்தப் பல்வேறு ஆதரவுத் திட்டங்களுக்காக, கடந்தகால நிதியிருப்பில் இருந்து பணம் எடுக்க அவசியம் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக, செலவின மறுஒதுக்கீட்டின் மூலம் இந்தத் திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படும்.
ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டால், இந்த ஆதரவுத் திட்டங்களும் அதற்கு ஏற்றாற்போல நீட்டிக்கப்பட முடியுமா என்பது குறித்து தமது அமைச்சு பரிசீலிக்கும் என்று அமைச்சர் வோங் தெரிவித்தார்.
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், இந்த முறை வழங்கப்பட்ட நிதி உதவி தொகுப்பு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைப் போன்றதல்ல என்று கூறினார்.
பெரும்பாலான வர்த்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் புதிய வேலைகளையும் வாய்ப்புகளையும் ஆதரிப்பதற்காக வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் போன்ற அரசாங்க திட்டங்களும் உள்ளதே இதற்குக் காரணம்.
கடந்த ஆண்டு, கொவிட்-19 ஆதரவுத் திட்டங்களுக்கு ஐந்து வரவு செலவுத் திட்டங்கள் மூலம் $100 பில்லியன் வரையில் ஒதுக்கப்பட்டது. நிதி இருப்பிலிருந்து $52 பில்லியன் வரை எடுக்கப்பட்டது.
“கடந்த ஆண்டுடன் ஒப்பிட இன்றைய சூழல் மிகவும் மாறுபட்டது. இந்தச் சூழலில் நிதி இருப்பிலிருந்து பணம் எடுக்க மீண்டும் அதிபரின் அனுமதியை நாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை,” என்ற அமைச்சர், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தற்காலிகமாக கடுமையாக்கப்படும் இத்தகைய சூழலை சிங்கப்பூர் காலத்துக்கு காலம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் சுட்டினார்.
“எனவே, நிதி இருப்பில் கைவைக்காமல், நமது சொந்த வளத்தைப் பயன்படுத்தி அத்தகைய நிலைமைகளுக்கு ஏற்ப செயல்பட நாம் பழகிக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே இந்தப் புதிய தற்காலிக உதவித் திட்டத்துக்கு நிதியை ஒதுக்க முடிந்துள்ளது,” என்றார் திரு வோங்.
சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கும் தகுதி பெறும் லாப நோக்கற்ற அமைப்புகளுக்கும் வாடகைக் கழிவு வழங்கப்படும். தகுதி பெறும் குறைந்த, நடுத்தர வருவாய் ஈட்டும் ஊழியர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் உதவி போன்றவையும் புதிய கொவிட்-19 மீட்சி உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.