சிங்கப்பூரில் கடுமையாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும் வகையில் $800 மில்லியன் ஆதரவுத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் மேம்பட்ட சம்பள மானியங்கள், வாடகைக் கழிவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், பாதிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக்கூடங்கள், நிகழ்கலை, கலை பயிற்று நிலையங்கள் ஆகியவற்றுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் உள்ளூர் ஊழியர்களுக்கு 50 விழுக்காடு சம்பள ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அண்மையில் கடுமையாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடு
களின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகங்களுக்கான மேம்பட்ட ஆதரவுத் திட்டங்களை அறிவிக்க நேற்று மெய்நிகர் வழியாக செய்தியாளர்களைச் சந்தித்த போது திரு வோங் இவற்றைத் தெரிவித்தார்.
அதேபோல, செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்ட துறைகள் வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 30 விழுக்காடு மானியங்களைப் பெறும்.
இதன் மூலம் சில்லறை வர்த்தகங்கள், தனிநபர் பராமரிப்பு சேவை நிலையங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், வரலாறு விளக்கத் தளங்கள், திரையரங்குகள், விளையாட்டு உள்ளரங்கங்கள் மற்றும் இதர குடும்ப பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியன பயன்பெறும்.
இருப்பினும், இந்த மேம்பட்ட சம்பள ஆதரவுத் திட்டத்திற்கு பேரங்காடிகள், பல்பொருள் அங்காடிகள், இணைய சில்லறை வர்த்தகங்கள் போன்றவை தகுதி பெறமாட்டா.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வழங்கப்படும் சம்பளத்திற்குப் பொருந்தக்கூடிய இந்த உதவித்தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என நிதி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
உள்ளூர் ஊழியர்களை சம்பளமில்லா கட்டாய விடுப்பில் வைக்கும் அல்லது அவர்களை ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகள், அத்தகைய ஊழியர்களுக்கான வேலை ஆதரவுத் திட்ட உதவியைப் பெற தகுதிபெற மாட்டார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது. மேம்பட்ட சம்பள ஆதரவுத் திட்ட உதவி நாடும் இதர வர்த்தகங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
மே 16 முதல் ஜூன் 13 வரை அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட, விழிப்புநிலை அதிகரிக்கப்பட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவி வழங்க கடந்தகால நிதியிருப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.
மாறாக, செலவின மறுஒதுக்கீட்டின் மூலம் இந்தத் திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படும்.
சில மேம்பாட்டுச் செலவுகளுக்கு அண்மையில் நிறைவேற்றப்பட்ட Singa எனப்படும் முக்கிய உள்கட்டமைப்பு அரசாங்கக் கடன் சட்ட மசோதாவின்கீழ் நிதி வழங்கப்படும் என அமைச்சு கூறியது.
அமைச்சர் வோங் மேலும் கூறுகையில், "தற்போதைய ஒட்டுமொத்த நிலவரத்தைப் பார்க்கையில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்படாது," என்றார். தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உதவி இருப்பதாக அவர் சொன்னார்.
இருப்பினும், இது தொடர்பான மேல்விவரங்களை கொவிட்-19க்கான அமைச்சுகள்நிலை பணிக்குழு திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கும் என்றார் திரு வோங்.
ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டால், இந்த ஆதரவுத் திட்டங்களும் அதற்கு ஏற்றாற்போல நீட்டிக்கப்பட முடியுமா என்பது குறித்து தமது அமைச்சு பரிசீலிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, கொவிட்-19 ஆதரவுத் திட்டங்களுக்கு ஐந்து வரவு செலவுத் திட்டங்கள் மூலம் $100 பில்லியன் வரையில் ஒதுக்கப்பட்டது. சேமிப்பிலிருந்து $52 பில்லியன் வரை எடுக்கப்பட்டது.
"கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்றைய சூழல் மிகவும் மாறுபட்டது. இந்தச் சூழலில் சேமிப்பிலிருந்து மீண்டும் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்க வில்லை.
"எனவே, நாட்டின் நிதி சேமிப்பில் கைவைக்காமல், நமது சொந்த வளங்களைப் பயன்படுத்தி நிலைமைகளுக்கு ஏற்ப செயல்பட நாம் பழகிக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே இந்தப் புதிய தற்காலிக உதவித் திட்டத்துக்கு நிதியை ஒதுக்க முடிந்துள்ளது," என்று விளக்கினார் திரு வோங்.
சிரமத்தில் இருப்போருக்கு மேம்பட்ட சம்பள மானியம், வாடகைக் கழிவு

