கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைய கட்டுப்பாடுகளால் பொருளியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த, நடுத்தர வருவாய் பெறும் ஊழியர்கள் ஒருமுறை வழங்கீடாக $700 வரை பெற உள்ளனர்.
புதிய தற்காலிக மானியத் திட்டத்தின்கீழ் இந்த உதவி அளிக்கப்படும்.
சுய-தொழில் செய்யும் ஊழியர்களும் இந்த உதவித் திட்டத்திற்கு தகுதிபெறுவர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கான மேம்பட்ட ஆதரவுத் திட்டங்களை நேற்று அறிவித்த நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், இதனைத் தெரிவித்தார்.
இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு சம்பளமின்றி வேலை செய்வோர் அல்லது குறைந்தபட்சம் ஒரு மாத வருவாயில் 50 விழுக்காடு அளவுக்கு இழப்பைச் சந்தித்தோர் புதிய கொவிட்-19 மீட்சி மானியத்திற்கு (தற்காலிகம்) விண்ணப்பிக்கலாம்.
சம்பளமில்லா விடுப்பில் வைக்கப்பட்டுள்ள தகுதிபெறும் ஊழியர்கள் இந்த மானியத் திட்டத்தின் கீழ் ஒருமுறை வழங்கீடாக $700 வரை பெறுவர். அந்தக் காலக்கட்டத்தில், குறிப்பிட்ட அளவு வருமான இழப்பைச் சந்திப்போர் $500 வரையிலான ஒருமுறை வழங்கீட்டைப் பெறுவர்.
இதற்கு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து ஜூலை 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவித் தொகை குறித்த கூடுதல் விவரங்களை, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிடும்.
உணவு-பானத் துறை, சில்லறை வர்த்தகம், விளையாட்டு, உடலுறுதிக் கூடம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இந்தப் புதிய உதவி தற்போதுள்ள கொவிட்-19 மீட்சி மானியத் திட்டத்தின் (சிஆர்ஜி) ஒரு பிரிவு ஆகும். கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மீட்சி மானியத் திட்டம் இவ்வாண்டு ஜனவரி 18ல் தொடங்கப்பட்டது.
"கொவிட்-19 மீட்சி மானியத் தொகையைப் பெற சில விதி
முறைகளும் தகுதி நிர்ணயங்களும் உள்ளன. அது மாற்றப்படப் போவதில்லை.
"ஆனால், தற்போதைய புதிய கட்டுப்பாட்டு சூழலுக்கான வேறுபட்ட விதிமுறைகளுடன் ஒரு தற்காலிக உதவித் திட்டத்தை ஏற்கெனவே உள்ள திட்டத்துடன் இணைத்துள்ளோம்," என்றார் அமைச்சர்.
"எனவே இது தற்காலிகமானது, இது இந்த குறிப்பிட்ட காலத்துக்கானது. அதன்பிறகு வழக்கமான கொவிட்-19 மீட்சி உதவி மானியம் தொடரப்படும்," என்று திரு வோங் மேலும் கூறினார்.
கொவிட்-19 மீட்சி மானியத் திட்டம் மார்ச் மாதத்தில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மாதம் $700 வரையில் பெறும் வகையில் அவ்வாறு செய்யப்பட்டது.
மார்ச்சில் 10,000க்கும் அதிகமானோருக்கு ஏறக்குறைய $10 மில்லியன் கொவிட்-19 மீட்சி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

