எதிர்காலத் திட்டங்களை பட்டியலிட்ட சுகாதார அமைச்சர் ஓங்
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு, மருத்துவமனைகளையே அடிப்படையாகக் கொண்டிராமல் சமூகத்தில் உள்ள நோயாளிகளை கவனிக்கும் சமூகத்தை மையப்படுத்தி இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறைகூவல் விடுத்துள்ளார்.
திரு ஓங், சுகாதார அமைச்சுக்குப் பொறுப்பு ஏற்று இரு வாரங்களே ஆகின்றன.
இந்த நிலையில் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் தமது எண்ணங் களை அவர் பகிர்ந்து கொண்டார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற மெய்நிகர் பயிலரங்கில் அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
2017ஆம் ஆண்டில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது குறிப்பிடப்பட்ட மூன்று அம்சங்களை அமைச்சர் விளக்கினார்.
சுகாதாரப் பராமரிப்புக்கு அப்பால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தரத்திலிருந்து மதிப்புமிக்க நிலைக்கு முக்கியத்துவம் தருவது, மருத்துவமனைக்கு அப்பால் சமூகத்தின் மீது கவனம் செலுத்துவது ஆகியன அந்த மூன்று அம்சங்கள்.
இதில் கடைசி அம்சத்தை குறிப்பிட்ட திரு ஓங், சிரமமில்லாத, எளிதில் பெறக்கூடிய, குறைவான கட்டணத்தில் வழங்கப்படும் பரா மரிப்பு சேவைகளால் நோயாளிகள் பலனடைவார்கள் என்றார்.
இதற்கு மருத்துவமனைகளின் தீவிரப் பராமரிப்பையும் தாண்டி சமூகத்தை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் நோயாளிகளின் சிறப்புப் பராமரிப்பு அல்லது அவசர நிலை சிகிச்சைகளில் கவனம் செலுத்த முடியும்.
ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் சமூகத்தில் பெரிய அளவில் பங்காற்றலாம்.
தனியார் பொது மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பின் தொடர்ச்சி யாக இன்றியமையாத பங்கை ஆற்ற முடியும். இதற்கு சமூகத்தில் செயல் பட்டு வரும் பலதுறை மருந்தகங் களை அவர் உதாரணமாக சுட்டிக் காட்டினார்.
தனியார் பொது மருத்துவர்கள் தங்களுடைய மருந்தகங்களையும் தாண்டி நோயாளிகளுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்க வேண்டும் என்றார் அமைச்சர்.
நோயாளிகளையும் அவரது குடும்பத்தையும் புரிந்துகொண்டு நீண்டகால நோய்களை நிர்வகிக்கும் ஒரு கிராம மருத்துவர்போல் செயல் பட வேண்டும்.
மருந்தாளுநர்களும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்துவதை நோயாளிகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்கள் மீண்டும் மருத்துவமனை சிகிச்சைக்கு வருவதை குறைத்து முக்கிய பங்காற்றலாம். பொதுவான நோய்களை கண்டறிந்து நிர்வகிப் பதில் பயிற்சி பெற்ற தாதிகள் தேவையான மருத்துவ பரி சோதனைகளை நடத்தி தகுந்த மருந்துகளை வழங்கி நோயாளி களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்று அமைச்சர் ஓங் சொன்னார்.
அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் வேளையில் அமைச்சர் ஓங் இவ்வாறு பேசியுள்ளார்.
2010ஆம் ஆண்டிலிருந்து இந்தச் செலவு இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இது மும்மடங்காகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2010ல் $10 பில்லியனாகவும் 2018ல் $21 பில்லியனாகவும் இருந்த சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் 20130ல் $59 பில்லியனை எட்ட விருக்கிறது.

