சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் தொடர்ந்து மேம்பட்டு, சமூக அளவில் தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்தால், சமூக ஒன்றுகூடல்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு தளர்த்த முடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (மே 31) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் சற்று முன்பு உரையாற்றிய அவர், கிருமிப் பரவலை எதிர்கொள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் அன்றாடம் பதிவு செய்யப்படும் புதிய கிருமித்தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதைச் சுட்டினார்.
“உங்களது ஆதரவு காரணமாக, தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றொரு பெரிய கிருமித்தொற்றுக் குழுமம் உருவெடுக்காத பட்சத்தில், கிருமித்தொற்று நிலவரத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும்,” என்றார் பிரதமர் லீ.
இன்னொரு வாரத்தில் இதுகுறித்து சிங்கப்பூருக்கு உறுதியாக தெரியவரும் என்ற அவர், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முடிந்தால் வீட்டிலிருந்து பணிபுரியுமாறும் தேவை ஏற்பட்டால் மட்டும் வெளியே செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
“மிகவும் முக்கியமாக, உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால்கூட, உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்,” என்று பிரதமர் லீ கூறினார்.