கொவிட்-19 தடுப்பூசி மையங்களில் சிறப்பு ஏற்பாடு
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இனி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு தேவைப்படாது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் அறிவித்ததை அடுத்து நேற்று காலை முதல் தடுப்பூசி மையங்களுக்கு முதியவர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இச்சிறப்பு ஏற்பாட்டின்படி ஏதேனும் ஒரு தடுப்பூசி மையத்திற்குச் செல்லும் முதியவர்களுக்கு அங்கு உடனே தடுப்பூசி போடப்படும்.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 75 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும் எஞ்சிய 25% அதாவது கிட்டத்தட்ட 280,000 முதியவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
இவர்கள் இனி முன்பதிவின்றி தடுப்பூசி மையத்திற்குச் சென்று கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
நடமாடுவதில் சிரமம் அல்லது தடுப்பூசி மையத்திற்குச் செல்வதில் சிக்கல் இருக்கும் நிலையிலும் தடுப்பூசியை வீட்டுக்கே வந்து போடும் சேவை, இக்குறிப்பிட்ட வயது பிரிவினருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.
தடுப்பூசி போடும் பணி முதியவர்களுக்காக எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
முதியவர்கள் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் இருப்பதால் கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பை அரசாங்கம் திட்டமிடும்போது அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அதிபர் ஹலிமா, பக்கவிளைவுகள் குறித்த அக்கறை சிலருக்கு இருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
"தடுப்பூசி பாதுகாப்பானது. ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட 760,000 முதியவர்களே அதற்கு மிக வலுவான ஆதாரம்," என்றார் அவர். தடுப்பூசி செயல்முறை தொடர்பில் மூத்தோருக்கு உதவுமாறு அண்டைவீட்டார், நண்பர்கள் ஆகியோருக்கும் அதிபர் அறிவுறுத்தினார்.
அடித்தள அமைப்புகள், சமூகச் சேவை அமைப்புகள் ஆகியவை இதற்காக கைகொடுக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், மூத்தோர் அனைவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதே தம் விருப்பம் என்றார்.

