கொவிட்-19 தொற்றால் மரணம் நிகழ்வதும் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது மலேசிய சுகாதார அதிகாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
மலேசியாவில் அன்றாடம் கிருமி தொற்றுவோர் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்ததை அடுத்து, அங்கு இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை முழு முடக்கநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பும் இறப்பும் கூடியதற்கு அதிகம் பரவக்கூடிய உருமாறிய கொரோனா கிருமிகள் காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில், மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர். சென்ற ஆண்டிலும் இதேபோல் மூன்று குழந்தைகள் இறந்துபோனதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த ஜனவரி-மே காலகட்டத்தில், கிருமி தொற்றியதை அடுத்து ஐந்து வயதுக்குட்பட்ட 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 27 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக டாக்டர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
"குறைந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மழலைகளையும் குழந்தைகளையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க எல்லாத் தரப்பினரும், குறிப்பாக பெற்றோரும் காப்பாளர்களும் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது," என்று டாக்டர் ஹிஷாம் கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு தொடக்கத்தில் இருந்து இவ்வாண்டு மே 30ஆம் தேதிவரை மொத்தம் 82,341 குழந்தைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக அண்மையில் மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்திருந்தார்.
அறுநூறாயிரத்தைக் கடந்த பாதிப்பு
இந்நிலையில், மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,748 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக நேற்றுப் பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 603,122ஆக உயர்ந்தது.
ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டு வரும் மாநிலமாக சிலாங்கூர் நீடிக்கிறது. அங்கு மேலும் 2,612 பேரை கொரோனா தொற்றிவிட்டது. கோலாலம்பூர் (851), நெகிரி செம்பிலான் (709), சரவாக் (706), ஜோகூர் (446) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலைகளில் வந்தன.
தடுப்பூசிக்கு எதிராகத் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
இதற்கிடையே, பொதுமக்களிடம் பீதி ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது அவசரச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி மலேசிய உள்துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது.
"தடுப்பூசிக்கு எதிரான குழுவினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பது அவர்களின் உரிமை. ஆனால், ஒட்டுமொத்த சமூகமும் நோய் எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் எனும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும்படி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அவர்கள் தவறான தகவல்களைப் பரப்பும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்துள்ளார்.

