கோலாலம்பூரின் கம்போங் முகிபாவில் நடமாடும் தடுப்பூசி வாகன முன்னோடித் திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு நேற்று கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் குறிக்கோளுடன் நடமாடும் தடுப்பூசி வாகனத் திட்டம் இடம்பெறுவதாக அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் முதியவர்களுக்கும் உடற்குறையுள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் கூட்டரசுப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போட முடியும் என்றும் அவர் சொன்னார்.
"இத்திட்டத்திற்கு அனுமதி பெற்ற பிறகு, இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து பத்து நடமாடும் தடுப்பூசி வாகனங்களும் அடுத்த மாதத்தில் 39 வாகனங்களும் இயக்கப்படும்," என்றார் திரு அனுவார்.
இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டரசுப் பகுதிகளில் நாளொன்றுக்கு 15,000 முதல் 20,000 பேருக்குத் தடுப்பூசி போட முடியும் என்றார் அவர்.
இதற்கிடையே, பொது இடங்களில் அதிக உடல்வெப்பநிலையுடன் காணப்படுவோரைக் கண்டறிய திரெங்கானு மாநில போலிசார் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். தரையிலிருந்து அதிகபட்சம் 20 மீட்டர் உயரத்தில் இருந்தவாறு உடல்வெப்பநிலையை ஆளில்லா வானூர்திகள் கண்டறியும் என்று மாநில போலிஸ் தலைவர் ரொஹைமி முகம்மது ஈசா கூறினார்.

