கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா-நடேசன் தம்பதியரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தம்பதியரின் மூன்று வயது மகள் தருணிகாவுக்கு காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் கிறிஸ்மஸ் தீவில் பத்து நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
தருணிகாவுடன் அவரது தாயார் பிரியா மட்டுமே பெர்த்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். தந்தை நடேசனும் மற்றொரு மகள் கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியுள்ளனர். குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தம்பதியரின் அகதி களுக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாதது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தருணிகாவின் பெற்றோர் இலங்கையிலிருந்து பத்து ஆண்டு களுக்கு முன்பு புகலிடம் தேடி படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தனர். குவீன்ஸ்லாந்தில் அவர்கள் தங்கியிருந்தபோது அவர்களுக்கு தருணிகாவும் மூத்த மகள் கோபிகாவும் பிறந்தனர். கடந்த 2019ல் நாடு கடத்துவதற்காக அவர்கள் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் கடைசி நேர நீதிமன்ற உத்தரவால் விமானம் தரையிறக்கப்பட்டு அவர்கள் கிறிஸ் மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
இதற்கிடையே பிரியா-நடேசன் குடும்பத்தை அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஆனால் அவர்கள் குவீன்ஸ்லாந்துக்கே திரும்ப விரும்புவதாகக் கூறப்படுகிறது.