இந்தியாவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டு 'டெல்டா' எனப் பெயரிடப்பட்ட உருமாறிய கிருமியால் சிங்கப்பூரில் இதுவரை 550 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் 428 பேர் உள்ளூர்க் காரர்கள். 122 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
டெல்டா கிருமி எளிதில் மனிதர் களிடையே பரவக்கூடியது. இதனால்தான் இந்தியாவில் கிருமிப் பரவல் திடீரென அதிகரித்தது.
இந்த வகை கிருமி, கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது.
ஆனால் அண்மையில்தான் இது, சிங்கப்பூரில் பரவியிருக்கும் என நம்பப் படுகிறது.
கடந்த மே 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூரில் பத்து பேர் டெல்டா வகை கிருமியால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரி வித்திருந்தது.
டான் டோக் செங் மருத்துவமனையின் தொற்றுப்பரவலுக்கும் டெல்டா கிருமியே காரணம் என நம்பப்படு கிறது.
சிங்கப்பூரில் உறுதி செய்யப்பட்ட அனைத்து கொவிட்-19 சம்பவங்களும் தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தில் உள்ள தேசிய பொதுச் சுகாதார சோதனைச் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அப்போது கிருமியின் மரபணு வரிசையில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் உருமாறிய கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இதுவரை நான்கு வகையான உருமாறிய கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் டெல்டா கிருமியே அதிமானவர்களை பாதித்துள்ளதாக அமைச்சின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது, கவலையளிக்கும் வகையில் மனிதர்களிடையே அதி வேகத்தில் பரவுகிறது.
மே 31ஆம் தேதி வரை 449 உள்ளூர்ச் சம்பவங்கள், உருமாறிய கிருமி தொடர்பானவை.
இதில் 428 தொற்றுச் சம்பவங்கள் டெல்டா கிருமியால் ஏற்பட்டவை.
ஏழு பேர், பிரிட்டனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 'ஆல்ஃபா' உருமாறிய கிருமியால் பாதிக்கப்பட்டனர். ஒன்பது பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 'பீட்டா' கிருமியால் தொற்று ஏற்பட்டது.
பிரேசிலில் முதல் முறையாக கண்டு பிடிக்கப்பட்ட 'காமா' உருமாறிய கிருமி யால் ஐவர் பாதிக்கப்பட்டனர்.
உருமாறிய கிருமிகளுக்கு ஏற்ப கிருமிப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் கடந்த இரண்டு வாரங்களாக தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
"உருமாறிய கிருமிகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய தகவல்கள் கிடைக்கும்போது அதற்கு ஏற்ப தடுப்பு உத்திகளும் சரி செய்யப்படும். கிருமிப்பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்காக தொற்றுக்கு எதிரான பரிசோதனைகள், தொடர்புகளின் தடங்களை அறிதல், தடுப்பூசித் திட்டம் போன்றவற்றை சிங்கப்பூர் தீவிரப்படுத்தியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வோர் உருமாறிய கிருமியின் மரபணு வரிசையும் மாறுபட்டிருக்கும். இதை வைத்தே அதிகாரிகளும் அறிவியலாளர்களும் உருமாறிய கிருமியின் அடையாளத்தை கண்டுபிடிக்கின்ற னர்.
தேசிய பொதுச் சுகாதார சோதனைச் சாலையின் இயக்குநரான இணைப் பேராசிரியர் ரேமண்ட் லின், மரபணு வரிசைப்படுத்தும் முயற்சியால் புதிய தொற்றுக் குழுமங்களை ஏற்படுத்தும் கிருமிப் பரவலை தடுக்க முடிகிறது என்றார்.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வக உயிரியல் தகவல் கழகத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் செபாஸ் டியன் மௌரர்-ஸ்ட்ரோ, சிங்கப்பூரில் டெல்டா கிருமிப் பரவல் அதிகம் காணப் படுவதாக தெரிவித்தார். டெல்டா கிருமி யால் பெரிய தொற்றுக் குழுமம் ஏற்பட்டது. வட்டாரப் பயணிகள் பலருக்கு அந்த வகை தொற்று இருக்கிறது. இதனால் டெல்டா கிருமிப் பாதிப்பு அதிக முள்ளது என்று கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொவிட்-19 பல்வேறு நாடுகளில் உருமாறியுள்ளது.

