சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இருவழிப் பயணங்களை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று இருநாட்டுப் பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் லீ சியன் லூங் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனை நேற்று அதிபர் மாளிகையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கிய பின்னர் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் சிங்கப்பூருக்கு வருகையளித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த மாதம் நியூசிலாந்துக்குச் சென்ற திரு மோரிசன், அடுத்த கட்டமாக சிங்கப்பூர் வந்துள்ளார்.
இரு தலைவர்களது சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிரான போராட்டம், இரு நாடுகளுக்கும் இடையே பயணங்களைத் தொடங்குவது போன்றவை குறித்து பேசியதாக திரு லீ தெரிவித்தார்.
இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது.
உடல்நலம், தடுப்பூசி சான்றிதழ்களைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதிலிருந்து இது தொடங்குகிறது. மின்னிலக்க வடிவத்தில் இதனைச் செய்யலாம். அனைத்து ஏற்பாடுகளும் தயாரானதும் இருதரப்பிலும் நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் சிறிய அளவில் விமானப் போக்குவரத்தைத் தொடங்கலாம் என்றார் பிரதமர் லீ.
விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக அதற்கான நடைமுறையை வகுப்பதில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார் திரு மோரிசன்.
இந்த ஏற்பாட்டின் மூலம் பயணம் செய்யும் வாய்ப்பை, ஆஸ்திரேலியாவில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்கள் முதலில் பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்பு, சுகாதார தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் இரு நாடுகளும் நேற்றுக் கையெழுத்திட்டன.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத் திட்டத்தின் கீழ் இருநாட்டுப் பிரதமர்களும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடியாகச் சந்திப்பது வழக்கம். கொவிட்-19
சூழலினால் கடந்த ஆண்டு இணையம் வழி இச்சந்திப்பு இடம்பெற்றது.

