இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்பெயின்-மொரோக்கோ எல்லைப் பகுதி, ரஷ்யா மற்றும் இலங்கையில் உள்ள மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்
பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இலங்கையில் மனித உரிமை நிலைமை மோசமடைவதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பொதுமக்களைக் கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களைப் பயங்கரவாத தடைச்சட்டம் வழங்குவதாக அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் மூலம் மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்வதாகவும் பலவந்தமாக ஒப்புதல் வாக்கு
மூலங்கள் பெறப்படுவதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் இது அனைத்துலக அணுகு முறைகளுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் ஐரோப்பிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைத் வழங்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரிஉள்ளனர். இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.