எண் 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானதை அடுத்து அந்த நிலையத்தில் செயல்படும் 182 கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டு இருக்கின்றன.
அந்தச் சந்தை நாளை வரை மூடப்பட்டு இருக்கும். தஞ்சோங் பகார் நகர மன்றம், தேசிய சுற்றுப்புற வாரியம், புக்கிட் மேரா வியூ வியாபாரிகள் குழு ஆகியவை அந்தக் கடைக்காரர்களிடம் கடைகள் மூடப்படுவது பற்றி தெரிவித்து விளக்கம் அளித்து வருவதாக தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா நேற்று கூறினார். அந்தச் சந்தையும் நிலையமும் மூடப்படுவது பற்றி அப்பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவதாகவும் ஃபேஸ்புக்கில் அவர் தெரிவித்தார். இதனிடையே, கடைகளை மூடவேண்டிய தேவையைக் கடைக்காரர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று அவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. உதவி ஏதேனும் கிடைக்குமா என்று சிலர் கேட்டதாகவும் அது பற்றி உரிய அமைப்புகளுடன் செயல்பட்டு வருவதாகவும் திருவாட்டி பெரேரா குறிப் பிட்டார்.
அந்தச் சந்தை, உணவங்காடி நிலையத்தில் செயல்படும் ஒரு கடையில் உதவியாளராக வேலை பார்த்த 82 வயது மாதுக்கு தொற்று உறுதியானது. அந்த மாது இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதற்கு முன்னதாக அங்கு 74 வயது ஆடவருக்குத் தொற்று ஏற்பட்டு இருந்தது. அந்த ஆடவரும் இரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.
பாதிக்கப்பட்ட மாதுக்கு கடந்த வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். அடுத்த நாள் பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார்.
அவருக்குத் தொற்று இருந்தது ஏஆர்டி பரிசோதனையில் தெரியவந்தது. பிறகு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை யும் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியது.
அதனை அடுத்து அந்த மாது தனிமைப்படுத்தப்பட்டார்.
துப்புரவுப் பணிக்காக உணவங்காடி நிலையக் கடைகள் உட்பட 182 கடைகள் அடைப்பு