இம்மாதம் 28ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தொடக்கநிலை 1, 2, 3 மாணவர்கள் ஒரு வார காலத்திற்கு வீட்டிலிருந்தவாறு கற்பர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்கள், பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜூன் விடுமுறைக்குப் பின் மாணவர்களைப் படிப்படியாக பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
உயர்நிலை 1, 2 மாணவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிவரைக்கும் வீட்டில் இருந்தபடி கற்பர் என்றும் ஜூலை 1ஆம் தேதி வியாழக்கிழமை அவர்கள் பள்ளிக்குத் திரும்புவர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
தொடக்கநிலை 4 முதல் 6 வரையிலான மாணவர்கள், உயர்நிலை 3 முதல் 5 வரையிலான மாணவர்கள், தொடக்கக் கல்லூரி மாணவர்கள், மில்லெனியா கல்வி நிலைய மாணவர்கள் ஆகியோர் மட்டுமே இம்மாதம் 28ஆம் தேதி புதிய தவணைக்காலம் தொடங்கியதும் பள்ளிக்குத் திரும்புவர்.
ஜூலை 5ஆம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் மறுநாள் 6ஆம் தேதியில் இருந்து எல்லா மாணவர்களும் பள்ளிக்குத் திரும்புவர்.