கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, சில இந்திய மாநிலங்கள் கொரோனா மரணக் கணக்கை நேர்செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், மரண எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருக்கிறது. தொற்றால் இறந்தவர்களில் விடுபட்டுப்போனோரை இப்போது கணக்கில் சேர்த்து வருவதே அதற்குக் காரணம்.
சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேர் கிருமித்தொற்றால் மாண்டுபோயினர். அவர்களில் 2,771 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 2,288 'பழைய' கொரோனா மரணங்களை அம்மாநிலம் கணக்கில் எடுத்துக்கொண்டது.
இப்படி, விடுபட்டுப்போன கொரோனா மரணங்களை கணக்கில் சேர்க்கும் பணியை அந்த மாநிலம் கடந்த மே 21ஆம் தேதியில் இருந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 28 நாள்களில் மட்டும் கூடுதலாக 11,894 பேரின் பெயர்கள், கொரோனா மரணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உச்சமாக கடந்த புதன்கிழமை 6,141 கொரோனா மரணங்கள் பதிவாகின. அவற்றில் 71% 'பழைய' மரணங்கள். குறிப்பாக, அன்று பீகார் மாநிலம் மட்டும் 3,951 மரணங்களைப் பதிவுசெய்தது.
ஒட்டுமொத்தத்தில், கடந்த 30 நாள்களில் இந்தியாவில் பதிவான கொவிட்-19 மரணங்களில் ஐந்தில் ஒன்று பதிவுசெய்யப்படாமல் விட்டுப்போன 'பழைய' மரணம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
மகாராஷ்டிரா, உத்தராகண்ட், பீகார், கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்படி விடுபட்டுப்போன கொரோனா மரணக் கணக்கைச் சரிசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவும் அப்பட்டியலில் இணையவிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் 'அரசு வெளியிடும் கொரோனா மரண எண்ணிக்கை உண்மைநிலையைக் காட்டுவதாக இல்லை' என்று வழக்கு தொடரப்பட்டதையடுத்து, அதன் தொடர்பில் இம்மாதம் 28ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
'பத்து மடங்கு அதிகம்'
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் 2020 ஏப்ரல் முதல் இவ்வாண்டு மே வரை 3,275 பேர் கொரோனா தொற்றால் மாண்டுபோனதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், அதே காலகட்டத்தில் மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 32,752 மரணங்கள் கூடுதலாகப் பதிவாகியிருப்பதாக 'தி இந்து' செய்தி கூறுகிறது. ஹைதராபாத் மாநகராட்சி வழங்கிய இறப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்தது.
ஒப்பீட்டளவில், கோல்கத்தாவிலும் சென்னையிலும் முறையே அதிகாரபூர்வ எண்ணிகையைக் காட்டிலும் 4.5 மற்றும் 3.3 மடங்கு கூடுதல் மரணங்கள் பதிவாகி உள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

