புக்கிட் மேராவில் தலைகாட்டி உள்ள கொரோனா தொற்றுக் குழுமம், இதர புதிய தொற்று சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு இரண்டாம் கட்ட தளர்வுக்கான நேரம், அளவு ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து வருவதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தனது பொருளியலின் முதல் கட்ட திறப்பில் சிங்கப்பூர் இப்போது இருந்துவருவதாக அவர் இஸ்ன்டகிராம், பேஸ்புக்கில் இன்று (ஜூன் 16) குறிப்பிட்டார். இம்மாதம் 21ஆம் தேதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவிருந்தன.
“ஆனால் எதிர்பாராவிதமாக இப்போது புதிய தொற்று சம்பவங்கள் இடம்பெறுகின்றன, புக்கிட் மேராவில் பெரிய அளவில் தொற்று தலைதூக்கி இருக்கிறது. ஆகையால் இவற்றைக் கவனத்தில் கொண்டு அடுத்த கட்ட திறப்புக்கான காலம், அளவு ஆகியவற்றை மதிப்பிட்டு வருகிறோம்.
“சமூகத்தில் தொடர்பில்லா தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்,” என்று பல அமைச்சுகளை உள்ளடக்கிய அந்தக் சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு வருக்கும் இது சிரமமான காலம் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், தொற்றைக் கட்டுப்படுத்த இயன்ற ஆன அனைத்தையும் முடிந்த வரை அரசாங்கம் சிறப்பாக செய்து வருவதாக உறுதி கூறினார்.