சிங்கப்பூரில் பல இன, பல்வேறு வயது குடிமக்களும் நிரந்தரவாசிகளும் 2010ஐவிட இப்போது இரண்டு அல்லது அதிக மொழிகளில் அதிக புலமையுடன் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பெரும்பாலும் ஆங்கிலமே பேசுகிறார்கள். என்றாலும் ஆங்கிலத்தோடு இதர மொழி அல்லது மொழிகளையும் பேசுகிறார்கள்.
முக்கியமாக சீனம், மலாய், இந்தியர் ஆகிய மூன்று இனத்தவர்களைப் பார்க்கையில், ஒட்டுமொத்தமாக ஆங்கில அறிவு அதிகரித்து உள்ளது. இதனால் தாய்மொழிப் புழக்கம் குறைந்துள்ளது.
இந்தியர்களைப் பார்க்கையில் சென்ற ஆண்டில் வீட்டில் ஆங்கிலத்துடன் தமிழ் பேசியவர்கள் 10 பேரில் நால்வராக இருந்தனர்.
தமிழர்களில் தமிழ் மட்டும் பேசக்கூடியவர்கள் 3.2% ஆக இருந்தனர். இது 2010ல் 4.2% ஆக இருந்தது. 2010 முதல் 2020 வரைப்பட்ட பத்து ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இவற்றைத் தெரிவித்தன. வீடுகளில் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவோரில் ஐவரில் நால்வருக்கும் அதிகமானவர்கள் வேறு ஒரு மொழியையும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் வீடுகளில் பெரும்பாலும் ஆங்கிலத்தையே தொடர்ந்து பேசி வருகிறார்கள். 2010ல் 41.6% ஆக இருந்த இந்த விகிதம் சென்ற ஆண்டில் 59.2 % ஆகக் கூடியது.
பல இன மக்களிலும் வயது, கல்வித் தகுதி என்றில்லாமல் வீடுகளில் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுவது அதிகரித்து உள்ளது.
இருந்தாலும் இளையர்கள், அதிகம் கல்வி கற்றவர்களிடம் பொதுவாக ஆங்கிலம் அதிகம் புழங்குகிறது. பல்கலைக்கழக பட்டம் பெற்றுள்ள சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்களில் 10 பேரில் ஏறத்தாழ ஆறு பேருக்கு வீடுகளில் ஆங்கிலமே விரும்பி பேசப்படும் மொழியாக உள்ளது.
உயர்நிலைக்குக் குறைந்த படிப்புடன் கூடியவர்களில் ஆங்கிலப் புழக்கம் இந்தியர்களில் 34% ஆக உள்ளது. இது சீனர்களிடையே 9.6% ஆகவும் மலாய்க்காரர்களிடையே 13.5% ஆகவும் இருக்கிறது.