'எய்ம்ஸ்' மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை
பொதுமக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் இணங்கி நடக்கத் தவறினால், அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை அடுத்து, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.
இதனால், பல நாள்களாக தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் வெளியில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளிலும் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் பலரும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் திரிவதைச் செய்தி நிறுவனங்களின் படங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில், "மக்கள் விதிகளுக்கு இணங்கி நடக்கவில்லை எனில், அடுத்த 6-8 வாரங்களுக்குள் 3வது அலை தாக்கக்கூடும். பரவலாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்வரை, இன்னொரு கொரோனா பேரலை உருவாகாமல் தடுக்க நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்," என்று டாக்டர் குலேரியா எச்சரித்து இருக்கிறார்.
மூன்றாவது அலையின்போது குழந்தைகள் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதற்குச் சான்று இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,419 பேர்க்குத் தொற்று உறுதியானதாகவும் மேலும் 1,576 பேர் இறந்துவிட்டதாகவும் இந்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

