ரெட்ஹில் லேன், ரெட்ஹில் குளோஸ் பகுதிகளில் ஏழு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கட்டாய கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
அங்கு சில புளோக்குகளின் கழிவுநீரில் கொரோனா கூறுகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
ரெட்ஹில் லேனில் 81, 82, 83 ஆகிய புளோக்குகளும் ரெட்ஹில் குளோசில் 87, 88, 89, 90 ஆகிய புளோக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு ‘தொற்று இல்லை’ என முடிவு கிடைத்தவர்களுக்கு இப்போதைய பரிசோதனை கட்டாயமில்லை.
“எவரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். மேலும் கொரோனா பரவாமல் தடுத்து சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவர்,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அந்த புளோக்குகளுக்கு வந்து சென்றவர்களும் அவற்றின் குடியிருப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இது சமூகத்தில் அறிகுறியற்ற தொற்றுகளைக் கண்டறிய உதவும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
புளோக் 84A ரெட்ஹில் லேனில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலும் 89 ரெட்ஹில் குளோசின் கீழ்த்தளத்திலும் இன்று (ஜூன் 21) தொடங்கிய பரிசோதனை நடவடிக்கை நாளை மறுநாள் வரை இடம்பெறும்.