இந்தியாவில் 'டெல்டா பிளஸ்' என்ற புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி கவலை தரும் அம்சமாக இருக்கிறது என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்தப் புதிய கிருமி வேகமாகப் பரவக் கூடியது. நுரையீரல் உயிரணுக்களில் வலுவாக ஒட்டிக்கொள்ளக்கூடியது.
நோய் எதிர்ப்பு மருந்துகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அந்தப் புதிய உருமாறிய கிருமிக்கு அதிகமாக இருக்கிறது என்று அறிவியல் வல்லுநர்கள் குழு ஒன்று மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்து இருக்கிறது.
இதுவரையில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 பேர் டெல்டா பிளஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து அந்தக் கிருமியைக் கட்டுப்படுத்தும்படி மத்திய அரசாங்கம் அந்த மாநிலங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
புதிய உருமாறிய கிருமி உலகின் பல நாடுகளிலும் தலைதூக்கி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல் நாடுகளில் அந்தக் கிருமியால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதனிடையே, தமிழ்நாட்டில் கொவிட்-19 தொற்று இன்னும் ஓரிரு நாட்களில் ஒடுங்கிவிடும் என்று அந்த மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாக மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மூன்றாவது அலை தொற்று தலைதூக்கினாலும் அதைத் திறம்பட சமாளிக்க எல்லாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் மே மாதம் 7ஆம் தேதிக்கு முன் நாள் ஒன்றுக்கு சராசரியாக 61,441 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஆனால் இந்த எண்ணிக்கை இப்போது 1.34 லட்சம் பேராக கூடி இருக்கிறது என்று மருத்துவ குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதன்கிழமை புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 6,895 ஆகக் குறைந்துவிட்டது என்றும் அன்று மட்டும் 13,000 பேர் குணமடைந்து இருப்பதாகவும் அரசு தெரிவித்தது.
மே 21ஆம் தேதி புதிதாக பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 36,184 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை அது முதல் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
மரண எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்து வருகிறது. புதன்கிழமை 194 பேர் மரணமடைந்தனர்.

