தேசிய தடுப்பூசி இயக்கத்தை சிங்கப்பூர் தீவிரப்படுத்துகிறது. நாளை முதல் ஒவ்வொருநாளும் 80,000 தடுப்பூசிகள் வரை போடப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
அதிகமானோர் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டுப்பாடுகளைத் தளர்த்த உதவும். கொவிட்-19 உடன் வாழ்வதற்கு சிங்கப்பூர் திட்டமிடும் வேளையில், இது, பயணங்களுக்கும் அதிகமானோர் ஒன்றுகூடுவதற்கும் வசதி ஏற்படுத்தும்.
தற்போது ஏறக்குறைய அன்றாடம் 47,000 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசிகள் முன்கூட்டியே கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அன்றாட தடுப்பூசி எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுகிறது.
மேலும், தற்போது முதல் ஜூலை மாத நடுப்பகுதி வரையில் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள கூடுதலாக 500,000 புதிய இடங்களை சேர்க்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
திட்டமிட்டபடி தடுப்பூசிகள் வந்து சேர்ந்தால் தடுப்பூசி போடத் தயாராக உள்ளோரில் பெரும்பாலானோர் ஜூலை இரண்டாம் பாதியில் முதல் தடுப்பூசியைப் பெற்றிருப்பார்கள் என்று அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் கூட்டத்தில் நேற்று திரு ஓங் தெரிவித்தார்.
இலக்கு எட்டப்பட்டதும், ஆறு முதல் எட்டு வாரங்களாக தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளுக்கான கால இடைவெளியை நான்கு வாரங்களாகக் குறைப்பது பற்றி அமைச்சு ஆராயும் என்றும் அவர் சொன்னார்.
முடிந்தவரை பெரும்பாலானோருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்க இரு தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளி நீட்டிக்கப்பட்டது. இலக்கை எட்டியதும், இரண்டாவது தடுப்பூசியை முன்கூட்டியே பெறும் வகையில் தேதியை மாற்றிக்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு ஓங் கூறினார்.
இது, அதிகமானோர் இரு தடுப்பூசி களையும் பெற்று அதிகபட்ச பாதுகாப்பைப் பெற வகைசெய்யும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. திட்டம் தயாரானதும் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
12 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் தடுப்பூசிக்குப் பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கும் நோக்கத்தில், அவர்களுக்கான இரு வார முன்னுரிமைத் தடுப்பூசித் திட்ட காலம் ஜூலை முதல் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.
முதல் தடுப்பூசியைப் போட ஜூலை நடுப்பகுதி அல்லது இறுதிக்கு பதிவு செய்திருப்போர், தேதிகளை மாற்றி, முன்கூட்டியே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தடுப்பூசிக்குப் பதிவு செய்வதற்கான அழைப்பை இன்னும் பெறாத, தடுப்பூசி பெற தகுதி உடையோர், அடுத்த வாரத்துக்குள் தேதியைப் பதிவு செய்துகொள் வதற்காக குறுஞ்செய்தியைப் பெறுவர்.
ஜூலை 2 முதல், சிங்கப்பூரில் வசிக்கும் 12 முதல் 39 வயதுடைய நிரந்தரவாசி கள், நீண்ட காலம் வாழ்வதற்கான விசா வைத்திருப்போர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்படும். அவர்கள் தடுப்பூசி போட பதிவு செய்துகொள்ளலாம். தடுப்பூசி போடுவதற்கான தேதிகளை முன்பதிவு செய்யும் இணைப்பு, ஜூலை 2ஆம் தேதி முதல் அவர்களது கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
ஜூன் 23ஆம் தேதி வரையில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது உள்ளூர் மக்கள் தொகையில் 53 விழுக்காட்டினர், குறைந்தபட்சம் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்று திரு ஓங் கூறினார்.
ஏறக்குறைய 36 விழுக்காட்டு மக்கள் இரண்டு தடுப்பூசிகளுடன் முழுமையாகத் தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர்.
60 வயதிற்கு மேற்பட்ட முதியோரில் 75 விழுக்காட்டினர் குறைந்தது ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ளனர். இது போதாது என்று கூறிய அமைச்சர் ஓங், கொரோனா கிருமியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகமான முதியோர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேசிய தினத்துக்கு முன்னதாக, மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினருக்கு முதல் தடுப்பூசியையாவது போடுவது சிங்கப்பூரின் இலக்கு என்று மே மாதம் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருந்தார். சிங்கப்பூரின் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தேசிய தினத்திற்குள் மூன்றில் இரண்டு பங்கினர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெறும் வகையில் இலக்கை கூட்டலாம் என்றார் அமைச்சர் ஓங்.
"இது பேராவலான இலக்கு. ஆனாலும் சாத்தியமானது," என்றார் அமைச்சர். இது ஓர் இடைக்கால மைல்கல் என்றாலும் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் முழுமையான தடுப்பூசியைப் பெறுவதை சிங்கப்பூர் உறுதிசெய்ய வேண்டும். அதிக மக்களுக்குத் தடுப்பூசி போடுவதால், கொவிட்-19 உடன் வாழ்வதற்கான திட்ட வரைவை பணிக்குழு உருவாக்கும்.
"ஆனால் நாங்கள் மிகவும் கவனத்துடன் இருக்கிறோம். இது உருமாறிக்கொண்டே இருக்கும் எதிரி. இது தொடர்ந்து அதிர்ச்சிகளையும் மாற்றங்களையும் முன்வைத்தபடி இருக்கும். ஆனால் இந்தச் சவாலை கடைசிவரை எதிர்கொள்ள நாங்கள் உறுதியுடன் உள்ளோம்," என்று ஓங் கூறினார்.

